கொலை மற்றும் ஆட்கடத்தல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!
ஜனநாயகப் படுகொலை, நீதிக்கு புறம்பான சகல ஆட்கடத்தல்கள், கொலை மற்றும் ஆட்கடத்தல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாணசபையின் முதலமைச்சரின் பங்கேற்புடன் மாகாணசபையின் பேரவைச் செயலகத்திற்கு முன்பாக ஏ- 9 வீதியில் கண்டனப் போராட்டம் ஒன்று இன்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடக்கில் போர்க்காலத்தில் காணாமற்போனவர்களை தேடி அலையும் குடும்பங்களின் போராட்டத்தை முடக்கும் நோக்குடன் அரசாங்கத்தினால் திட்டமிட்டு கைதுசெய்யப்பட்டு பூஸா முகாமில் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ள பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது மகளான விபூசிகா அகியோரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் இன்று யாழ்ப்பாணத்தில்; கண்டனப் போராட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இதில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மற்றும் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களும், வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் உட்பட பலரும் பங்கு பற்றியிருந்தனர்.
இன்று காலை 9 மணியளவில் வடக்கு மாகாணசபையின் 7 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் தலைமையில் இடம்பெற்றது. இதனையடுத்து பிற்பகல் 2 மணியளவில் மாகாண சபையின் முன்பாக ஏ-9 வீதியில் இந்தக்கண்டனப் போராட்டம் இடம்பெற்றது.
நேற்று பிற்பகல் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் தலைமையில் அவரது வாசஸ்தலத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது எடுக்கப்பட்ட மேற்படி முடிவிற்கு அமைவாக இந்தப்போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது கடந்த 13 ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இராணுவத்தினரின் சுற்றிவளைப்பின் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது 13 வயதேயான மகள் விபூசிகா ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என பிரதானமாக வலியுறுத்தப்படவுள்ள அதேவேளை வடக்கில் தொடரும் சட்டவிரோத கைது நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கமும் படைத்தரப்பினரும் நிறுத்த வேண்டுமெனவும் இந்த விடயத்தில் சர்வதேச நாடுகள் கூடியகவனம் செலுத்தி தமிழருக்குகெதிரான அடக்கு முறைகளைக் கட்டுப்படுத்த முன்வர வேண்டுமெனவும் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
ஏ-9 வீதியில் இடம்பெற்ற இந்தக் கண்டனப் போராட்டத்தை பொலிஸார் தடுக்க முற்பட்ட போது மாகாணசபை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமையினால் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.
Average Rating