ஓரினச் சேர்க்கைக்கு இடையூறாக இருந்த மனைவியை, கொலை செய்து எரித்த கணவன்..
தான் தன்னினச் சேர்க்கையாளர் என்பதை மறைத்து திருமணம் செய்த வங்கி உத்தியோகத்தர் ஒருவர் தனது மனைவியை நிலத்தை சுத்திகரிக்கப்படும் உபகரணத்தால் கழுத்தை நெரித்துக் கொன்று அவரது உடலை தோட்டத்தில் குப்பைகளை எரிக்க பயன்படும் உபகரணத்தில் எரித்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை வூல்வர்ஹம்டன் கிறவுண் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வோல்சால் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளி இனத்தவரான ஜஸ்விர் ராம் கின்டே (30 வயது) என்பவரே தனது மனைவியான வர்கா ராணியை (24வயது) இவ்வாறு கொடூரமாக படுகொலை செய்துள்ளார்.
இந்தியாவில் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் பாடநெறியில் பட்ட பின்படிப்பை பூர்த்தி செய்த வர்கா ராணிக்கும் ஜஸ்விருக்கும் கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது.
இதனையடுத்து வர்கா கடந்த ஆகஸ்ட் மாதம் விசா கிடைத்ததையடுத்து தனது கணவருடன் வாழ்வதற்காக பிரித்தானியா வந்தார்.
தொடர்ந்து ஒரு நாள் ஜஸ்விர் பொலிஸாரை தொடர்பு கொண்டு வர்கா ராணி தன்னை திருமணம் செய்வதற்காகவே பிரித்தானியா வந்ததாகவும் இங்கு வந்த பின் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது ஜஸ்விரின் வீட்டுத் தோட்டத்திலிருந்த குப்பைகளை எரிப்பதற்கு பயன்படும் 22 அங்குல ஆழமான உபகரணத்தில் இனங்கண்டறியப்படாத மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில் ஜஸ்விரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து பொலிஸார் தீவிர விசாரணைக்குட்படுத்திய போது தானே தனது மனைவியை கொன்றதை ஜஸ்விர் ஒப்புக் கொண்டுள்ளார்.
தனது தன்னினசேர்க்கை பழக்கத்தை பெற்றோரிடம் மறைத்திருந்த ஜஸ்விர் அவர்களை திருப்தி செய்யும் முகமாக திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் தனது தன்னினச் சேர்க்கை பழக்கத்திற்கு இடையூறாக இருந்த தனது மனைவியை படுகொலை செய்வதற்கு ஜஸ்விர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Average Rating