தனக்கு தானே சமாதி கட்டிக் கொண்ட, இலங்கை அமைச்சர்
எதையாவது செய்து அவ்வபோது பரபரப்பு ஏற்படுத்தி வருபவர் அமைச்சர் மெர்வீன் சில்வா. இலங்கை மக்கள் தொடர்பு துறை அமைச்சராக உள்ள இவர் தான், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா. மனித உரிமை கமிஷன் தலைவர் நவிபிள்ளை கூறியபோது, நான் வேண்டுமானால் நவிபிள்ளையை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
அதுமட்டும் இன்றி, இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஒருவர் குற்றம் சாட்டியதை அடுத்து அவரை பிரபாகரனுக்கு ஏற்படும் கதி தான் உங்களுக்கும் ஏற்படும் என்று மிரட்டினார். மேலும், டி.வி ஆசிரியர் மற்றும் செய்தி வாசிப்பாளரை தாக்கியது, அரசு அதிகாரி ஒருவரை மரத்தில் கட்டி வைத்தது என்ன இவருடைய பரபரப்பு செயலுக்கு அளவே இல்லை.
இப்படி பரபரப்பில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் மெர்வீன் சில்வா, தற்போது தனக்கு தானே சமாதி கட்டி, பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.
இந்த சமாதியில் சுவர்கள் எழுப்பி அதை புத்தமத வழக்கப்படி பூஜை செய்யப்பட்டது. அதில் புத்தமத துறவிகளும் கலந்து கொண்டனர்.
இதுபற்றி மெர்வீன் சில்வா கூறும்போது, “மனிதனாக பிறப்பவன் இறப்பது உறுதி. எனவே அதைக்கண்டு பயப்படக் கூடாது. நான் சாவுக்கு பயப்படவில்லை என்பதை உலகுக்கு உணர்த்துவதற்கு தான் நான் எனக்கு சமாதி கட்டியுள்ளேன். எனது சமாதி கல்வெட்டில் எனது பிறந்தநாள் பொறிக்கப்படும். இறந்த நாள் பின்னர் பொறிக்கப்படும்.” என்று தெரிவித்தார்.
புத்தமதப்படி இறந்தவர்களை எரிப்பது வழக்கம். அதேபோல மெர்வீன் சில்வா இறந்ததும் அவரது உடல் எரிக்கப்பட்டு அதன் அஸ்தியின் ஒருபகுதி சமாதியில் வைக்கப்படும் என்று புத்தமத துறவி ஒருவர் கூறினார்.
Average Rating