இராக்கிலிருந்து ஜப்பான் படை விரைவில் வாபஸ்: பிரதமர் தகவல்
இராக்கிலிருந்து ஜப்பான் தனது படைகளை விரைவில் வாபஸ் பெறும் என்று பிரதமர் கொய்சுமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் நிருபர்களிடம் சொன்னார். அவர் கூறியதாவது: இராக்கில் உள்ள ஜப்பான் படை சுய பாதுகாப்பு படை என்று அழைக்கப்படுகிறது. தெற்கு இராக் நகரமான சமவாவில் இந்த படை தற்போது உள்ளது. இப்படையை இராக்கிலிருந்து வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இராக்கில் அமைந்துள்ள புதிய அரசுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவு அளிக்கும். ஜப்பான் படைகள் வாபஸ் பெறப்படும் நிலையிலும் இராக்கின் மறுசீரமைப்பு பணிகளுக்கு எங்களால் முடிந்த வரையிலும் ஆதரவும் உதவியும் அளித்து வருவோம். இந்த பணியில் அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் ஐ.நா. ஆகியவற்றுடன் ஒத்துழைப்புடன் செயல்படுவோம்.
ஜப்பானின் சுய பாதுகாப்பு படைகளின் பணிகள் இராக் அரசு மற்றும் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளன. இராக்கில் குடிநீர் விநியோகம், மருத்துவ வசதி, பள்ளிகள், சாலைகள் மறு சீரமைப்பில் ஜப்பான் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றியுள்ளது. இது தொடர்பாக இராக்கின் பாராட்டையும் ஜப்பான் பெற்றுள்ளது என்றார் கொய்சுமி.