மனைவியை விபசாரத்தில் ஈடுபட வலியுறுத்திய கணவன்..
மனைவியை விபசாரத்தில் ஈடுபட வலியுறுத்திய கணவன்: பிள்ளைகளையும் விபசாரத்தில் ஈடுபடுத்தலாம் என கருதி கொலை செய்த தாய்-
தனது மகள்மார் வளர்ந்தபின் அவர்களை தனது கணவர் விபசாரத்தில் ஈடுபடுத்தக் கூடும் என்ற அச்சத்தில் பாலகிகளான அவர்களை தாயொருவர் படுகொலை செய்த விபரீத சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.
பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த பல்கீஸ் பீபி (சுமார் 30 வயது) என்ற மேற்படி தாய், கடந்த புதன்கிழமை தனது மகள்மாரான இஷ்ரத் (4 வயது) மற்றும் முகாதாஸ் (2 வயது) ஆகியோருக்கு பலவந்தமாக நஞ்சை புகட்டிய பின் தற்கொலை செய்து கொள்ளும் முகமாக தானும் நஞ்சை அருந்தியுள்ளார்.
இந்நிலையில் லேயஹ் மருத்துவமனைக்கு தாயும் மகள்மாரும் கொண்டு செல்லப்பட்ட போதும், மகள்மாரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
உயிர் தப்பியுள்ள பல்கீஸ் பீபி விபரிக்கையில், போதைவஸ்துக்கு அடிமையான தனது கணவர் எதுவித வருமானமும் இல்லாததால் தன்னை விபசாரத்தில் ஈடுபட வலியுறுத்தி தினசரி சித்திரவதை செய்து வந்ததால் தான் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாக கூறினார்.
மகள்மாரை உயிருடன் விட்டு சென்றால் அவர்கள் வளர்ந்த பின் அவர்களையும் தனது கணவர் விபசாரத்தில் ஈடுபடுவதற்கு வலியுறுத்தக் கூடும் என்ற அச்சத்தில் அவர்களைக் கொல்ல தீர்மானித்ததாக அவர் தெரிவித்தார்.
சம்பவம் இடம்பெற்ற போது அவர்களது 6 வயது மகன் அமீர் பாடசாலை சென்றிருந்ததாக கூறப்படுகிறது.
Average Rating