கென்யாவின் முஸ்லிம் மதகுரு மகபுரி சுட்டுக் கொலை
கிழக்கு ஆப்பிரிக்காவின் நுழைவாயிலாகவும், முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்றாகவும் கருதப்படும் கென்யாவின் மொம்பாசா நகரில் நேற்று நடந்த ஒரு தாக்குதல் சம்பவத்தில் தீவிர இஸ்லாமிய மதகுருவான மகபுரி சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
அல்-கொய்தா இயக்கத் தலைவரான மறைந்த ஒசாமா பின்லேடனுக்காக ஆதரவுக் குரல் கொடுத்த அபூபக்கர் ஷெரிப் அகமது என்ற முஸ்லிம் தலைவரே மகபுரி என்று அறியப்பட்டார். சென்ற ஆண்டு நைரோபியில் உள்ள வெஸ்ட்கேட் என்ற வணிக வளாகத்தைத் அல்-கொய்தா ஆதரவு பெற்ற அல்-ஷெபாப் தீவிரவாதிகள் தகர்த்தபோது அது நூறு சதவிகிதம் நியாயமானது என்ற கருத்தினை இவர் வெளியிட்டார்.
மூத்த ஷெபாப் உறுப்பினர்களுடன் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளதாகக் கருதப்பட்ட இவர் சோமாலியாவில் நடைபெறும் வன்முறைப் போராளிகள் இயக்கத்திற்காக இளம் கென்யா முஸ்லிம்களுக்கு உதவியளிப்பதன்மூலம் தன்பக்கம் ஈர்ப்பதாக விமர்சிக்கப்பட்டார். ஐ.நாவின் பொருளாதாரத் தடைகள் பட்டியலில் இவரது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவரும், இவரது குழுவினைச் சார்ந்த சிலரும் நேற்று மொம்பாசா நகரத்தின் நீதிமன்றத்திற்கு வெளியே தங்களுக்கு வரவேண்டிய வாகனத்திற்காகக் காத்திருந்தபோது அவர்களைக் கடந்து சென்ற காரிலிருந்த மர்ம நபர்கள் இவர்களை நோக்கி சுட்டுள்ளனர்.
இதில் மகபுரியும், மற்றொருவரும் பலியாகியுள்ளதாகவும், தாக்குதலை நடத்தியவர்கள் யாரென்று தெரியவில்லை என்றும் மூத்த காவல்துறை அதிகாரியான ரிச்சர்ட் நகாட்டியா குறிப்பிட்டுள்ளார். மகபுரியின் குடும்ப உறுப்பினர்கள் அவரது உடலை அடையாளம் காட்டியதாகத் தெரிவித்த அந்த அதிகாரி இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
இருப்பினும், முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட இந்த கடற்கரைப் பகுதிகளில் கென்யா அதிகாரிகளே இத்தகைய தீவிர முஸ்லிம் தலைவர்களின் கொலைகளில் பின்னணியாகச் செயல்படுகின்றனர் என்று குற்றம் சாட்டும் ஆதரவாளர்கள் காவல்நிலையத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வானத்தை நோக்கி சுட்ட காவல்துறையினர் பின்னர் அவர்களைக் கலைந்துபோகச் செய்தனர்.
Average Rating