புலிகள் சார்பு அமைப்புக்களை தடை செய்தமை, பழிவாங்கும் நோக்கம் கொண்டதல்ல..
பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் அல்லது பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவி செய்யும் 16 அமைப்புக்களை தடைசெய்தமையானது பழிவாங்கும் நோக்கத்தை கொண்டதல்ல என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக பேச்சாளர், பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
ஜெனீவா வாக்கெடுப்பின் எதிரொலியாக பழிவாங்கும் நோக்குடன் இவ்வாறு தடைசெய்யப்பட்டதாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அது உண்மைக்கு புறம்பானது.
அவற்றில் எந்தவித உண்மையும் கிடையாது என்று அவர் மேலும் தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் பிரிகேடியர் மேலும் உரையாற்றுகையில்:
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட 1373 என்ற இலக்கமுடைய பிரேரணையின் தீர்மானத்தின் அடிப்படையிலேயே பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சும், வெளிவிவகார அமைச்சும் இணைந்து 16 அமைப்புக்களையும் தடை செய்ததே தவிர, சிலர் தவறாக நினைப்பது போல் ஜெனீவா வாக்கெடுப்புக்கு பழிவாங்கும் வகையில் அவசரமாக செய்த ஒரு விடயமல்ல.
ஏனெனில் சர்வதேச சட்டமொன்றை நாம் நினைத்தவுடன் ஒரே நாளில் நடைமுறைப்படுத்தவோ, மாற்றவோ முடியாது என்றார். தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் கனடா, பிரித்தானியா போன்ற பல நாடுகளுடன் தொடர்புடையன. இந்த நாடுகளும் இதனை கடைப்பிடிக்குமா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரிகேடியர் ருவன் வணிகசூரிய:
ஐ. நா. வில் கொண்டுவரப்பட்ட 1373 என்ற பிரேரணை அங்கீகரித்த நாடுகளில் மேற்படி நாடுகளும் அடங்குகின்றன. எனவே இந்த சட்ட திட்டத்திற்கு அவர்களும் கட்டுப்பட்டவர்கள். இதனால் இலங்கை அரசின் இந்த தீர்மானத்தை அவர்கள் அங்கீகரிப்பார்கள், ஒத்துழைப்பார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம் என்றார்.
Average Rating