பெண் சிப்பாய்களை துன்புறுத்திய துருப்பினர் இனங்காணப்பட்டனர்..
அனுராதபுரம் இராணுவ முகாமில் பெண் சிப்பாய்களை துன்புறுத்திய படை துருப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிதாக இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட பெண் சிப்பாய்களை துன்புறுத்தும் காட்சிகள் அடங்கிய காணொளி அண்மையில் இணையத்தளங்களில் வெளியாகி இருந்தது.
இந்த காணொளியின் அடிப்படையில் விசாரணை நடத்திய இராணுவத்தினர், துன்றுத்தலை மேற்கொள்ளும் துருப்பினரை அடையாளம் கண்டிருப்பதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 1972ஆம் ஆண்டு முதல் இலங்கை இராணுவத்தில் இருந்து 50 ஆயிரம் பேர் வரையில் தப்பி சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் 30000 பேரை சட்ட ரீதியாக இராணுவத்தில் இருந்து நீக்கி இருப்பதாகவும் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
எஞ்சிய 20 ஆயிரம் பேரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவில் இருந்து படகுகள் மூலம் போதைப் பொருட்கள் கடத்தப்படுவது தொடர்பில் இந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய கடற்படை பேச்சாளர் கோஷல வர்ணகுலசூரிய கருத்து வெளியிட்டார்.
சமாதான சூழ்நிலையில், சோதனை கெடுப்பிடிகளை தாங்கள் நிறுத்தியிருந்ததாகவும், சில மீனவர்கள் இந்த சந்தர்ப்பத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டு போதை பொருள் கடத்தலில் ஈடுப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் இவ்வாறான குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே, மீண்டும் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Average Rating