திருடப்பட்ட கைத்தொலைபேசி, 21 ஆவது நபரிடம் இருந்து மீட்பு
மூன்று மாதங்களுக்கு முன்னர் திருடப்பட்ட பெறுமதி மிக்க கைத்தொலைபேசி ஒன்றைப் பொலிஸார் மீட்டுள்ளதுடன், கைத்தொலைபேசியை வைத்திருந்தவரையும் கைது செய்துள்ளனர்.
ஆனால் கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் போது குறிப்பிட்ட ஒரு நபரிடம் இருந்தே தான் கைத்தொலை பேசியை வாங்கியதாக வேறொருவரைக் கைகாட்டினார்.
அதேபோல் அவரும் மற்றொருவரைக் கைகாட்ட அந்தப் பட்டியல் அனுமார்வால் போன்று நீண்டு கொண்டே சென்றுள்ளது.
அப்போது தான் குறித்த கைத்தொலைபேசி 20 பேரிடம் கைமாறியதும், கைதுசெய்யப்பட்டவர் 21 ஆவது நபர் என்பதும் தெரியவந்துள்ளது.
95 ஆயிரம் ரூபா பெறுமதியான அந்தக் கைத்தொலைபேசி கடந்த ஜனவரி மாதம் திருட்டுப் போயிருந்தது. அதன் உரிமையாளர் நெல்லியடிப் பொலிஸாரிடம் அது குறித்து முறையிட்டிருந்தார்.
அதையடுத்து அந்தக் கைத்தொலைபேசியின் எமி இலக்கத்தைக் கொண்டு (கையடக்கத் தொலைபேசியின் எமி இலக்கத்தைக் கொண்டு, அந்தத் தொலைபேசியில் தற்போது எந்த இலக்க சிம் உள்ளது.
அதன் உரிமையாளர் யார் என்ற விவரங்களை தொலைபேசி சேவை வழங்குநர்களின் உதவியுடன் அறிய முடியும்) அதைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் பொலிஸார் இறங்கினர்.
அதில் துன்னாலையைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரிடம் சிக்கினார். அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இந்த நீண்ட பட்டியல் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளது.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பொலிஸார், ”இந்தக் கைத்தொலைபேசி இதுவரை 20 பேரிடம் கைமாறி விற்பனை செய்யப்பட்டுள்ளமை ஆரம்ப விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
தற்போது கைத்தொலைபேசியை வைத்திருந்தவர் 21 ஆவது நபர். விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
அதன் முடிவிலேயே குறித்த கைத்தொலைபேசி எத்தனை பேரிடம் கைமாறியுள்ளது என்பதைத் திட்டவட்டமாகக் கூறமுடியும்” என்று தெரிவித்துள்ளனர்.
கைத்தொலைபேசியை வைத்திருந்தவர் தாம் பணம் கொடுத்தே அதனைப் பெற்றுக் கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.
எனினும் அவர் திருட்டுப் பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத் தப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 25ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Average Rating