முகத்தில் அமிலத்தை வீசி கொன்று விடுவதாக, டைரக்டர் பி.ரவிக்குமார் மிரட்டுகிறார் -நடிகை சுஜிபாலா
நடிகை சுஜிபாலா, டைரக்டர் பி.ரவிக்குமார் மீது, வடபழனி உதவி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தார். முகத்தில் அமிலத்தை வீசி கொலை செய்துவிடுவதாக, பி.ரவிக்குமார் மிரட்டுகிறார் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
சந்திரமுகி, கோரிபாளையம் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை சுஜிபாலா. உண்மை என்ற படத்தில் நடித்து வரும்போது, அந்த படத்தின் டைரக்டர் பி.ரவிக்குமாருக்கும், நடிகை சுஜிபாலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
பின்னர் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு, நிச்சயதார்த்தம் முறிந்து போனதாக அறிவித்துவிட்டனர்.
இந்தநிலையில், சமீபத்தில், டைரக்டர் பி.ரவிக்குமார், சுஜிபாலா எனது மனைவி என்று பகிரங்கமாக பேட்டி கொடுத்தார். அவரது இந்த போட்டி தமிழ்பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரவிக்குமார் பேட்டிக்கு பதிலடி கொடுத்து, சுஜிபாலாவும் பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில், டைரக்டர் பி.ரவிக்குமாரை தான் மணக்கவில்லை என்றும், அவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், படவுலகை விட்டு தன்னை விரட்ட பார்கிறார் என்றும் சுஜிபாலா தெரிவித்து இருந்தார்.
உதவி கமிஷனரிடம் புகார்
இந்த நிலையில், நடிகை சுஜிபாலா, வடபழனி உதவி போலீஸ் கமிஷனர் சுப்பராயனை சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
டைரக்டர் பி.ரவிக்குமாருக்கும், எனக்கும் நடந்த திருமண நிச்சயதார்த்தம் முறிந்து விட்டது. நிச்சயதார்த்தத்தின் போது, அவர் எனக்கு வாங்கி கொடுத்த பொருட்களை நான் திருப்பி கொடுத்துவிட்டேன். அவர் ஏற்கனவே திருமணமாகி, 2 குழந்தைகளுக்கு தந்தை ஆவார்.
தற்போது நான் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தது, அவருக்கு பிடிக்கவில்லை. என்னை மிரட்டுகிறார். எனது பெற்றோரை கொலை செய்துவிடுவதாக சொல்கிறார்.
எனது முகத்தில் அமிலத்தை வீசி கொன்றுவிடுவேன் என்கிறார். அவரால் எனது பெற்றோர் உயிருக்கும், எனது உயிருக்கும் ஆபத்து உள்ளது.
எனவே அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், எங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக, உதவி போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சுஜிபாலா கூறினார்.
நடவடிக்கை உண்டா?
இந்த புகார் மனு தொடர்பாக உதவி கமிஷனர் சுப்பராயனிடம் கேட்டபோது, முதலில் ரவிக்குமாரை அழைத்து விசாரணை நடத்தப்படும். அதன்பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
Average Rating