“ராமர் சீதையை சந்தேகப்பட்டாலும், தமிழர் தென் ஆபிரிக்காவை சந்தேகப்பட கூடாது!” -சம்பந்தன்
இலங்கை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “தென்னாபிரிக்க அரசை நாம் சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் தேவையில்லை” என்று திடீரென தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்க அரசுக்கு இவர் திடீரென சர்டிபிகேட் கொடுக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? தென்னாபிரிக்க அரசை யாரோ சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறார்களோ என்ற சந்தேகம், இந்த தலைவருக்கு ஏன் வந்தது?
விவகாரம் என்னவென்றால், வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருக்கும் இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள், அவ்வப்போது இலங்கைக்கும் செல்வதுண்டு. அதற்கு முக்கிய காரணம், அடுத்த வெளிநாட்டு சுற்றுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்வதே.
கடந்த மாதம் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை சென்ற தமிழ் எம்.பி.க்கள் குழு ஒன்று, கொழும்புவில் உள்ள தென்னாபிரிக்க தூதரகத்தை அணுகி, “உங்கள் நாட்டுக்கு வந்து அதிகாரிகளுடன் தமிழர் பிரச்னை பற்றி பேச ஆவலாக உள்ளோம்” என மனு கொடுத்தார்கள்.
ஆனால், ஏற்கனவே மற்றொரு செட் தமிழ் எம்.பி.க்கள், இதே மனுவை கொடுத்துவிட்டு, விசா மற்றும் விமான டிக்கெட்டுக்காக கொழும்புவில் காத்திருந்தனர்.
இந்த 2-வது செட்டில் நன்கு பேசக்கூடிய நபர் ஒருவர் இருந்ததால், இவர்களுக்கு அடித்தது அதிஷ்டம். தென்னாபிரிக்க அரசின் அழைப்பு கிடைத்து விட்டது.
இந்த மாதம் 9-ம் தேதி, தென்னாபிரிக்கா கிளம்புகின்றார்கள்.
இலவு காத்த கிளிகளாக இருந்த 1-வது செட் எம்.பி.க்கள் சும்மா இருப்பார்களா? அதிலும், இந்த எம்.பி.க்களில் ஒருவருடன் நெருக்கமானவர் தமிழ் செய்தி இணையதளம் ஒன்று நடத்துகிறார் என்னும்போது, இந்த விவகாரத்தை சும்மா விடுவாரா?
அதுதான், “தமிழர் தலைவர்களை அழைத்து மூளைச் சலவை செய்ய தென்னாபிரிக்கா சதி” என்று ஒரு செய்தியை கொளுத்தி போட்டுவிட்டார்கள். இதே செய்தி காப்பி-அன்ட்-பேஸ்ட் இணையதளங்களால் பிரபலமாகி விட்டது.
செய்தியை பார்த்து அதிர்ந்துபோன (தென்னாபிரிக்க பயண அதிஷ்டம் அடித்த) எம்.பி. ஒருவர், “என்னது… மூளைச் சலவையா?” என கலவரப்பட்டு போனார்.
உடனே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அணுகி, “ஐயா.. ‘இல்லாத ஒன்றை’ இட்டுக்கட்டியுள்ளனர்” என புகார் தெரிவித்தார். (அதுதானே.. மூளைச் சலவை எப்படி செய்ய முடியும்?)
அதையடுத்தே, “ராமர் சீதையை சந்தேகப்பட்டாலும், நாங்கள் தென்னாபிரிக்காவை சந்தேகப்பட கூடாது” என்ற ரீதியில் அறிக்கை வெளியானது.
சந்தேகப்படும், சந்தேக நபர்கள், இவரது கட்சிக்கு உள்ளே இருப்பதுதான், சந்தேகத்துக்கு இடமில்லாத தமாஷ்!
–viruvirupu–
Average Rating