புலிகளுடைய ஆவணங்களை கொண்டே, தடை செய்யப்பட்டோர் பட்டியல் தயாரானது
முல்லைத்தீவு போர் முனையில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே வெளிநாடுகளில் செயற்படும் 16 புலம்பெயர் அமைப்புக்களையும், 424 தனிநபர்களையும், தடைசெய்யும் பட்டியல் தயாரிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண.
கொழும்பு ஆங்கிர வார இதழ் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
”இந்த 16 அமைப்புக்கள் மற்றும் 424 தனிநபர்களும், பயங்கரவாதத்துக்கு நிதியளிக்கும் சந்தேக நபர்களாகவே பட்டியலிடப்பட்டுள்ளனர். இவர்கள் மீது இப்போது தடை விதிக்கப்பட்டிருப்பதாக அர்த்தம் இல்லை.
அவர்களைத் தடைசெய்வதற்கு அல்லது விலக்கி வைப்பதற்கு நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் வெளிநாடுகளில் அதன் வலைப்பின்னல் இன்னும் செயற்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றது. அதனை எம்மால் நிரூபிக்க முடியும்.
நாம் முல்லைத்தீவில் பெருந்தொகையான ஆவணங்களை கைப்பற்றினோம். அவர்கள் நிதியை எப்படித் திரட்டினார்கள், புலிகளுக்கு இங்கு எப்படி அனுப்பினார்கள் என்ற விவரங்கள் அவற்றில் உள்ளன.
அவற்றில் புலிகளின் மூத்த தலைவர்களின் குறிப்புக்களும் அடங்கும். அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள எவரேனும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க விரும்பினால் இலங்கை நீதிமன்றங்களில் அந்த உத்தரவுக்கு எதிரான சவால்விட முடியும்.
அவர்கள் இங்கு வந்து தம்மை நிரூபிக்க முடியும். எதிர்காலத்தில் இன்னும் பல அமைப்புகள், தனிநபர்களின் பெயர்களும் வர்த்தமானியில் வெளியிடப்படக் கூடும்.
இலங்கையினது அனைத்துலக இராஜதந்திரத் தூதரகங்களின் மூலம் இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் தொடர்பாக, ஐ.நா தீர்மானத்துக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட நாடுகளிடம் கோருவோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating