இந்து மத கைதிக்கு, தந்தையின் இறுதி சடங்கை செய்ய அனுமதித்த பிரிட்டிஷ் நீதிமன்றம்
இந்து மதத்தைச் சேர்ந்த ஜோகிந்தர் பால் காஷ்யப் (57) என்பவர் பணத்தகராறு தொடர்பான ஒரு பிரச்சினையில் உல்வர் ஹாம்ப்டன் மாகாணத்தின் மேற்கு மிட்லாண்ட்ஸ் நகரில் உள்ள ஓக்வுட் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றார்.
இவரது தந்தை இறந்ததை முன்னிட்டு மூத்த மகன் என்ற உரிமையில் தந்தையின் இறுதிச் சடங்குகளை செய்வதற்கான அனுமதியை அவர் நீதிமன்றத்திடம் கோரினார். கைவிலங்குடன் இரண்டு பாதுகாப்பாளர்கள் உடன்வர காஷ்யப் தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளலாம் என்ற தீர்ப்பு அவருக்குக் கிடைத்தது.
இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த காஷ்யப் மூத்த மகனாக தனது மத சம்பிரதாயங்களின்படி தந்தைக்கு சில கடைசி காரியங்களைத் தான் செய்யவேண்டும் என்றும் அப்போதுதான் அவரது ஆன்மா சாந்தியடையும் என்றும் வாதிட்டார். இவரது கருத்துகளை இங்கிலாந்தின் இந்து மத அமைப்பும் ஆதரித்து கண்ணியத்துடன் இந்த சடங்குகள் செய்யப்படவேண்டும் என்பதைக் குறிப்பிட்டது.
ஐரோப்பிய மனித உரிமைகள் மரபுகளுக்கு எதிரான முடிவு இது என்றும் காஷ்யப்பின் வக்கீல்கள் குழு எடுத்துக்காட்டியது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் விசாரித்த பர்மிங்காம் நிர்வாக நீதிமன்ற நீதிபதி லெகட் கைதியின் விலங்குகளை நீக்கி அவரை இறுதிக் காரியங்களை செய்துவர அனுமதி அளித்துள்ளார்.
இங்கிலாந்தின் நீதிமன்ற வரலாற்றிலேயே இத்தகைய விலக்குகள் அளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும் என்று கருதப்படும் இந்த வழக்கு நாடு முழுவதும் பரந்த விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக இதனைக் கருதுவதாக டோனி விஜய் முமன் என்ற வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
Average Rating