இனியும் பொறுமை காட்ட முடியாது: தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம்- விடுதலைப்புலிகள் மிரட்டல்
இலங்கையில் விடுதலைப்புலிகள்- ராணுவம் இடையே அறிவிக்கப்படாத போர் நடந்து வருகிறது. முழு போர் வெடிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது. இந்த நிலையில் இருதரப்பினரையும் அமைதி படுத்த நார்வே தூதுக்குழு மீண்டும் முயற்சித்து வருகிறது. இலங்கைக்கான நார்வே தூதர் ஹான்ஸ் புரஸ்கர் நேற்று கிளிநொச்சிக்கு சென்று விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வனை சந்தித்து பேசினார். அப்போது தமிழ்செல்வன் அவரிடம் இப்போது நடத்தும் தாக்குதல் குறித்து கடுமையான புகார்களை கூறினார்.
அப்போது புலிகளுக்கு தடை விதித்த நாடுகளான சுவீடன், பின்லார்ந்து, டென்மார்க் நான்கு பிரதிநிதிகள் போர் நிறுத்த கண்காணிப்பு பணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று விடுதலைப்புலிகள் வற்புறுத்தினார்கள்.
சந்திப்புக்கு பிறகு தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:- அமைதி பேச்சுவார்த்தை என்பது பேப்பர் அளவில் மட்டுமே இருக்கிறது. நடைமுறைபடுத்துவது இல்லை. அர்த்தமில்லாத பேச்சுவார்த்தையில் என்ன பயன்?
இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்கி கொண்டிருக்கும்போது நாங்கள் மட்டும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது. முழு போருக்கு தயாராக இருக்கிறோம். எங்களிடம் ஆயுதமும் குண்டும் அல்ல. வீரர்களும் வலுவாக இருக்கிறார்கள். போர் என்று வந்தால் எங்கள் தற்கொலைப்படை உள்பட அனைத்து படைகளையும் தீவிரமாக களம் இறக்குவோம். இவ்வாறு தமிழ்செல்வன் கூறினார்.