வீதிச் சண்டையை, விலக்க சென்றவரின் கை துண்டிப்பு
இரண்டு குழுவினர்களுக்கிடையில் வீதியில் இடம்பெற்ற சண்டையை விலக்குவதற்கு மது போதையில் சென்ற நபரொருவர் கை துண்டிக்கப்பட்ட நிலையில் தம்புள்ள டென்சில் கொப்பேகடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கொக்கரெல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
நேற்று முன்தினம் பிற்பகல் 4.30 மணியளவில் படஹபொலகந்த என்ற கிராமத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான எஸ்.கே. அபேரத்ன (48 வயது) இவ்வாறு கை துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்.
மடஹபொல கந்த கிராமத்தில் பூப்பு நீராட்டு வைபவமொன்றில் தனது மனைவி சகிதம் கலந்து கொண்டு விருந்துண்டு, மது போதையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் வீதியோரத்தில் இருசாரார் கத்தி, கம்புத்தடி மற்றும் பொல்லுகளுடன் அடிதடிகளில் ஈடுபட்டிருந்ததைக் கண்ணுற்றார்.
தனது மனைவியின் வேண்டுகோளையும் பொருட்படுத்தாது, தள்ளாடியவறு சண்டை நடைபெறும் இடத்திற்குச் சென்று இரு சாராரையும் சமாதானப்படுத்தும் முயறச்சியிலீடுபட்டிருந்த வேளையில் கத்தி வெட்டில் அவர் கையை இழந்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை கொக்கரெல்ல பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Average Rating