கோபியின் துப்பாக்கிச் சூட்டில், இராணுவ வீரர் பலியாகவில்லை; கோபி, தேவியன் உட்பட்ட மூவரின் சடலங்கள் மீட்பு!
புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று தெரிவிக்கப்படும் கோபி என்பவரைத் தேடி வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது இராணுவ வீரர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
இராணுவ பயிற்சியொன்றின் போதே இராணுவ வீரர் உயிரிழந்தார் என்றும் குருணாகலைச் சேர்ந்த கே.கே.கமல் ராஜா (வயது 26) என்ற இராணுவ வீரரே இவ்வாறு பயிற்சியின் போது உயிரிழந்தார் என்றும் இராணுவ பேச்சாளர் கூறியுள்ளார்.
இலங்கையின் நான்காவது யுத்த தாங்கி படையணியின் புலனாய்வுப் பிரிவு வீரரே இவ்வாறு உயிரிழந்தார் என்றும் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
கோபி, தேவியன் உட்பட்ட மூவரின் சடலங்கள் மீட்பு-
புலிகள் இயக்கத்திற்கு உறுப்பினர்களை மீளிணைத்ததாக கூறப்படும் தேவியன் மற்றும் கோபி உள்ளிட்ட மூவர் சடலங்களாக மீட்கப்பட்டதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
மற்றைய சடலம் அப்பன் என அழைக்கப்பட்டவரினுடையதாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் பயங்கரவாத விசாரணை பிரிவினருக்கு அவசியமாக கருதப்பட்ட 31 வயதான கோபி எனப்படும் பொன்னையா செல்வநாயகம் கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் காவல்துறையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றிருந்தாக படையினர் தெரிவித்தனர்.
இதனையடுத்தே கோபி, தேவியன் மற்றும் அப்பன் உள்ளிட்ட சந்தேகத்திற்குரியவர்களை கைது செய்வதற்காக பாதுகாப்பு பிரிவினர் விரிவான தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர்.
இந்தநிலையில், கோபி உள்ளிட்ட சந்தேகத்திற்குரியவர்கள் நெடுங்கேணி பகுதியில் மறைந்திருப்பதாக பொதுமக்கள் தகவல் வழங்கியதாக ராணுவம் குறிப்பிட்டது.
இதனடிப்படையில், நேற்று ராணுவத்தினர் நெடுங்கேணி வனப்பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதனையடுத்து இன்று அதிகாலை கோபி உள்ளிட்ட மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டதாக ராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Average Rating