ஈராக்கில் சதாம் உசேன் வக்கீல் சுட்டுக்கொலை
ஈராக் நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி சதாம் உசேன் வக்கீல் பாக்தாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஷியா முஸ்லிம்கள் 148 பேரை சித்ரவதை செய்து கொன்றதாக சதாம் உசேன் மீதும் மற்றும் அவரது மாற்றாந்தந்தையின் மகன் மீதும் வழக்கு தொடரப்பட்டு தனிக்கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் சதாம் உசேன் சார்பில் வக்கீல் குழு ஒன்று ஆஜராகி வாதாடி வருகிறது. இந்த குழுவில் உள்ள மூத்த வக்கீல்களில் ஒருவர் கமீஸ் அல் ஒபைதி. 1982-ம் ஆண்டு சதாம் உசேனை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டது. துஜாயில் என்ற கிராமத்தைச்சேர்ந்த ஷியா முஸ்லிம்கள் இந்த சதியில் ஈடுபட்டனர். அது தோல்வியில் முடிந்தது.
இதைத்தொடர்ந்து அந்த கிராமத்தைச் சேர்ந்த ஷியா முஸ்லிம்கள் 148 பேரை சித்ரவதை செய்து கொன்றதாக தொடரப்பட்ட இந்த வழக்கில் அவருக்கும், அவரது சகோதரருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு வக்கீல் கோர்ட்டில் வாதாடினார்.
இது நடந்த 2 நாட்களில் சதாமின் வக்கீல் கமீஸ் அல் ஒபைதி கடத்தப்பட்டார். பாக்தாத்தில் இருந்த அவரை சிலர் கடத்தி சென்றனர். பிறகு அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் பாக்தாத்தில் கண்டு எடுக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடங்கப்பட்டது முதல் சதாம் உசேனின் வக்கீல்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வருகிறார்கள். ஒபைதி கொல்லப்பட்ட 3-வது வக்கீல் ஆவார்.