இன்று மதுரையில் கருணாநிதி, சந்திப்பைத் தவிர்க்க அழகிரி எஸ்கேப்!
தி.மு.க.விலிருந்து அழகிரி நீக்கப்பட்ட பின் முதல்முறையாக கருணாநிதி இன்று மதுரை வருகிறார். அழகிரியை கருணாநிதி சந்திக்கலாம் என்ற யூகம் நிலவிய நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அழகிரி நாகர்கோவிலில் நடைபெறும் தனது ஆதரவாளர்கள் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றுவிட்டார்.
முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி தி.மு.க.விலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதால், கருணாநிதிக்கும், அழகிரிக்கும் இடையிலான விரிசல் அதிகமானது. தென்மாவட்டங்களில் தனது செல்வாக்கைக் கட்சிக்கு உணர்த்தும் வகையில் தி.மு.க. வேட்பாளர்களைத் தோற்கடிப்பதற்கான வியூகங்களை அழகிரி வகுத்து வருகிறார்.
தி.மு.க. வேட்பாளர்கள் சிலரை பெயரைக் குறிப்பிட்டு இவர்கள், 4-வது இடத்துக்குத் தள்ளப்பட வேண்டும் என அழகிரி பேசும் பேச்சு தி.மு.க. மேலிடத்துக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்துக்கு கருணாநிதி இன்று மதுரை வருகிறார்.
மாலையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் கருணாநிதி இரவு மதுரையிலே தங்குகிறார். மதுரைக்கு எப்போது வந்தாலும் அழகிரி வீட்டுக்குச் செல்லாமல் கருணாநிதி இருந்தது இல்லை. அழகிரி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட பின் கருணாநிதி அழகிரி வீட்டுக்குச் செல்வாரா? இல்லையா? எனத் தெரியவில்லை.
premium-idகருணாநிதி மதுரை வரும் புரோகிராம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்ததால், கருணாநிதியைச் சந்திப்பதைத் தவிர்ப்பதற்காகவே 13, 14-ம் தேதிகளில் தனது ஆதரவாளர்கள் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில்அழகிரி ஏற்பாடு செய்தார் என மதுரை தி.மு.க.வினர் கூறுகின்றனர்.
தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. மாலை ராஜா இல்ல நிகழ்ச்சியில் நேற்று (சனிக்கிழமை) அழகிரி பங்கேற்றார். நிருபர்கள் அவரிடம் பேட்டியெடுக்க முயற்சி செய்தபோதிலும் அதைத் தவிர்த்துவிட்டார். மேடையில் அமைதியாக இருந்த அழகிரி சரியாகப் பேசவில்லை. முன்னெப்போதும் இல்லாத வகையில் உற்சாகமின்றியே காணப்பட்டார்.
இன்று நாகர்கோவிலில் தனது ஆதரவாளர் இல்ல நிகழ்ச்சியில் அழகிரி பங்கேற்கிறார். இதனால், கருணாநிதி – அழகிரி சந்திப்புக்கு வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
அழகிரி மதுரையில் இருந்திருந்தால் மகன் என்ற முறையில் அவரை கருணாநிதி சந்திக்கச் செல்வார். அழகிரி வீட்டில் இல்லாத நிலையில் அங்கு செல்வது சந்தேகமே.
Average Rating