மெக்சிகோவில் நடைபெற்ற பேருந்து விபத்தில் 25 பேர் பலி
மெக்சிகோ நாட்டின் டபஸ்கோ மாநிலத்தின் வில்லாஹெர்மோசா நகரத்திலிருந்து மெக்சிகோ சிட்டிக்கு பயணிகள் பேருந்து ஒன்று நேற்று புறப்பட்டது. இந்தப் பேருந்து சென்று கொண்டிருந்த நெடுஞ்சாலையில் 135 கி.மீ தொலைவில் ஒரு டிரைலர் டிரக் நிறுத்தப்பட்டிருந்தது. வேகமாக சென்று கொண்டிருந்த இந்தப் பேருந்தின் டிரைவர் நின்று கொண்டிருந்த டிரக்கைக் கவனிக்காமல் அதன் பின்னால் மோதியதில் பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 25 பேர் பலியானதாகவும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீப்பிடித்த பேருந்து முற்றிலும் கருகி உருக்குலைந்துள்ளதால் இறந்த பயணிகளை அடையாளம் காணமுடியவில்லை என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகக் கூட இருக்கலாம். ஆனால் தீயினால் பேருந்து முற்றிலும் சேதமடைந்ததில் உடல்கள் அடையாளம் காணப்படமுடியவில்லை என்று வெராகுரூஸ் நகர கவர்னர் ஜவியர் டுவார்டே தெரிவித்துள்ளார்.
ரோமன் கத்தோலிக்கப் பெரும்பான்மையினரைக் கொண்ட இந்த நாட்டில் புனிதவாரக் கொண்டாட்டத்தின் துவக்க தருணத்தில் நடைபெற்ற இந்த விபத்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Average Rating