நெடியவனுக்கு எதிராக, அபாய அறிவிப்பு?
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச தலைவர் என்று கூறப்படும் நெடியவனை கண்ட இடத்தில் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரினூடாக (இன்டர்போல்) ‘அபாய அறிவிப்பு’ விடுக்க இலங்கை முயற்சித்து வருகின்றது.
இவர் தற்போது நோர்வேயில் மறைந்திருப்பதாக இலங்கை புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவலை அடுத்தே இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க நெடியவன் முயற்சித்து வருவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெடுங்கேணியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் மூவரும் நெடியவனின் ஆலோசனைக்கமையவே செயற்பட்டு வந்துள்ளனர் என்றும் இலங்கை புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.
தாக்குதல் அல்லது குண்டுத் தாக்குதல் ஒன்றின் மூலம், இலங்கையில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பவை வெளி உலகுக்கு காட்டுவதையே அவர்கள் நோக்கமாகக் கொண்டு செயற்பட்டுள்ளனர் என்றும் புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
புலிகள் இயக்கத்தை உயிர்ப்பித்து செயற்படுத்துவதற்கான நிதி திரட்டல் நடவடிக்கையின் பின்னால் நெடியவனே உள்ளார் என்றும் இவ்வாறு திரட்டப்படும் நிதியின் மூலம் புலிகள் இயக்கத்தினர் மறைந்திருப்பதற்கான வீடுகள் மற்றும் வாகனங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன என்றும் தகவல் கிடைத்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு மேலும் கூறியுள்ளது.
Average Rating