யாழில் 03 இளைஞர்கள் மீது, தாக்குதல்..
யாழ். மல்லாகத்திலுள்ள விசாலாட்சிமன்ற முன்றலில் நின்றுகொண்டிருந்த இளைஞர்கள் மூவரை, முகத்தை துணிகளினால் மறைத்துக்கொண்டு வந்த கும்பலொன்று தாக்கியதால் படுகாயமடைந்த அம்மூவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஊரெழு பொக்கனையைச் சேர்ந்த இந்திரகுமார் கஜீபன் (வயது 19), சின்னராசா கௌதமன் (வயது 21), ஜெயசீலன் மயூரன் (வயது 21) ஆகிய மூவருமே படுகாயமடைந்தனர்.
தெல்லிப்பழை பொலிஸாரும் தெல்லிப்பழை பிரதேச செயலகமும் இணைந்து சித்திரைப் புத்தாண்டு இசை நிகழ்ச்சியை மல்லாகம் மகா வித்தியாலய மைதானத்தில் சனிக்கிழமை நடத்தியது.
இதன்போது, இரு குழுவினருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடே இத்தாக்குதலுக்கு காரணமென்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும்; பொலிஸார் கூறினர்.
இதேவேளை, யாழ். மல்லாகம் பகுதியில் சுன்னாகம், சூராவத்தையைச் சேர்ந்த தவனேஸ்வரன் நிருபன் (வயது 30) என்ற இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் படுகாயமடைந்த அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று சனிக்கிழமை நள்ளிரவு இந்த இளைஞர் வீதியால் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் இந்த வாள்வெட்டை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இச்சம்பவங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Average Rating