கோல் ஏதும் அடிக்காமல் அர்ஜென்டினா-ஆலந்து ஆட்டம் `டிரா’வில் முடிந்தது
உலக கோப்பை கால்பந்தில் நேற்று நள்ளிரவு `சி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் தங்களது கடைசி ஆட்டங்களில் அர்ஜென்டினா- ஆலந்து அணிகள் மோதின. இரு அணிகளும் ஏற்கனவே 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தன. எனினும் இந்த அணிகள் பலம் வாய்ந்தது என்பதால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்புடன் தொடங்கியது. ஆரம்பத்திலே தங்களுக்கு கார்னர் வாய்ப்புகளை இரு அணிகளும் கோல்களாக மாற்ற தவறின. செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விசுவரூபம் எடுத்து அர்ஜென்டினா அணிக்கு ஆலந்து கடும் நெருக்கடி கொடுத்தது.
27-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ரிக்ïல் ப்ரீக்கிக் வாய்ப்பை கோல் நோக்கி அடித்தார். ஆனால் அது ஆலந்து கோல் கீப்பர் வாண்டர்சன் கையில் பட்டு வெளியேறியது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல்கள் போடவில்லை.
46-வது நிமிடத்தில் ஆலந்து அணிக்கு ப்ரீக்கிக் வாய்ப்பு கிடைத்தது. இதையும் அந்த அணி கோட்டை விட்டது. அர்ஜென்டினாவின் ரிக்ïல் 52-வது நிமிடத்தில் அடித்த ஷாட் கோல் லைனுக்கு மேலே சென்று அதிர்ச்சி கொடுத்தது. ஆட்டம் முடிய கடைசி 20 நிமிடம் இருந்த நிலையில் அர்ஜென்டினாவின் மெஸ்சி வெளியேற்றப்பட்டு மாற்ற வீரர் களம் இறக்கப்பட்டார்.
செர்பியாவுக்கு எதிராக இரண்டு கோல்கள் அடித்த டிரெவஸ் 77-வது நிமிடத்தில் அருமையாக கோல் கம்பத்தை நோக்கி ஷாட் அடித்தார். இதையும் ஆலந்து கோல் கீப்பர் தனது திறமையால் கோல் விழாமல் தடுத்து விட்டார். எவ்வளவோ போராடியும் இரு அணிகளால் கடைசி வரை கோல் எதுவும் போட முடியவில்லை. இதனால் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
இந்த ஆட்டம் டிராவில் முடிந்ததன் மூலம் இரு அணிகளும் தலா 7 புள்ளிகளை பெற்றுள்ளது. கோல்கள் அடிப்படையில் அர்ஜென்டினா இந்த பிரிவில் முதலிடத்தை பிடித்தது.