கோஸ்டா ரிகா விமான நிலையத்தில் 6-வது நாளாக சிக்கித் தவிக்கும் கியூபா ஆசாமி
கியூபா நாட்டைச் சேர்ந்தவரின் அடையாள அட்டை காலாவதியானதால் கோஸ்டா ரிகாவின் சாந்தமரியா சர்வதேச விமானநிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் 6-வது நாளாக அங்கேயே இருக்கிறார்.
கியூபாவின் யோர்வங்கி பெரேஸ் டி பினா என்பவர் 2012ம் ஆண்டில் இருந்து கோஸ்டா ரிகாவில் வசித்து வருகிறார். இவர் கடந்த வியாழக்கிழமை ஹவானாவில் உடல் நலம் பாதிக்கப்பட்ட தன் தாயாரை பார்த்துவிட்டு அங்கிருந்து சான் ஜோஸ் விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரை நாட்டிற்குள் நுழைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
அவரிடம் தற்காலிக அகதி அடையாள அட்டை மற்றும் பணி அனுமதி சான்று ஆகியவை இருந்தும் அவை காலாவதியாகிவிட்டன. இதனால் அவரை அகதியாக கருதி அவரை நாட்டிற்குள் செல்ல அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.
அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரது வழக்கறிஞர் கடந்த வெள்ளிக்கிழமை ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்திருந்தார். அதன்பின்னர் அவருக்கு உரிய உணவு மறறும் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும், பிரச்சினை தீர்க்கப்படும் வரை அவரை நாடு கடத்தக் கூடாது என்றும் அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முறை இங்கு வந்தபோது அவர் அகதிக்கான சான்று கோரியிருந்தார். பின்னர் கோஸ்டா ரிகா பெண்ணை ஏப்ரல் 2012ல் திருமணம் செய்தபோதும், அங்கு நிரந்தர குடியிருப்பு கோரவில்லை. இப்போது, தன் மனைவியுடன் சான் ஜோசில் கடை நடத்தி வருகிறார்.
Average Rating