அமெரிக்காவில் 3 பேரை சுட்டுக் கொன்று, வாலிபர் தற்கொலை
அமெரிக்காவில் ஆர்கன் சாஸ் மாகாணத்தில் ஜோனஸ் போரோ நகரம் உள்ளது. நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் ஒரு வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அதில் அக்குடும்பத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, அங்கு காரில் ஒரு மர்ம நபர் வந்தான். அவன் திடீரென வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டான்.
அதில் அங்கிருந்த கிறிஸ்டானோ இஸ்லால் (38), புளோஷா டேவிலா (12), ரிச்சர்டோ லோபெஷ் (31) ஆகிய 3 பேர் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் தவிர 2 குழந்தைகள் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை தேடி வந்தனர். இதற்கிடையே சம்பவம் நடந்த வீட்டின் சிறிது தூரத்தில் ஒரு கார் நின்றது. அதில் ஒருவர் தலையில் குண்டு காயத்துடன் பிணமாக கிடந்தார். அது குறித்து விசாரணை நடத்தியதில் துப்பாக்கியால் சுட்ட நபர் இவன்தான் என தெரிய வந்தது.
அவனது பெயர் போர் பிரியோ ஹெர்னான்டஷ் (40) என தெரிய வந்தது. துப்பாக்கி சூடு நடத்திய இவன் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட இவன் சிகிச்சைக்குப் பின் சமீபத்தில் தான் வீடு திரும்பியிருந்தான். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கும், இவனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அது குறித்தும் விசாரணை நடக்கிறது.
Average Rating