திருமணம் செய்து வைக்காததால் தாயை தலையணையால் அமுக்கி கொன்ற மகன்
திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மனைவி புஷ்பராணி (வயது 60). இந்த தம்பதியின் ஒரே மகன் அகஸ்டின் சகாய ராஜ் வேளாங்கண்ணி (22). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரோக்கியசாமி இறந்து விட்டதால் பாரம் ஏற்றி இறக்கும் வேலைக்கு சென்று வந்த அகஸ்டின் குடிப் பழக்கத்துக்கு அடிமையானார்.
தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வரும் அகஸ்டின், தாய் புஷ்பராணி மற்றும் பாட்டி எஸ்தருடன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தகராறில் ஈடுபடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்றும் போதையில் வீட்டுக்கு வந்த அகஸ்டின், புஷ்பராணியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். புஷ்பராணி அவரை சமாதானம் செய்து தூங்க வைத்துள்ளார். பின்னர் இன்று அதிகாலை 2 மணிக்கு கண்விழித்து எழுந்த அகஸ்டின் தாய் புஷ்பராணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் ஆத்திரம் அடைந்த அகஸ்டின் தலையணையால் புஷ்பராணியின் முகத்தை அமுக்கியுள்ளார். இதில் புஷ்பராணி மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இதையறிந்த அகஸ்டின் அருகில் இருந்த அவரது பாட்டி எஸ்தரிடம் தெரிவித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து அந்த பகுதியினர் எடமலைப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் விசுவநாதன் தலைமையிலான போலீசார் புஷ்பராணியின் உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தாயை கொலை செய்த அகஸ்டினையும் கைது செய்தனர். தந்தை இறந்த நிலையில் தாயை கொன்று விட்டு ஒரே மகனும் ஜெயிலுக்கு போயுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating