நீரில் மூழ்கியே கொன்சலிற்றா உயிரிழப்பு: நீதிமன்றதில் அறிக்கை
யாழ்.குருநகர் பகுதியில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றா (23) கன்னித் தன்மை இழக்கவில்லையெனவும், அவர் நீரில் மூழ்கியே உயிரிழந்துள்ளதாகவும் சட்டவைத்தியதிகாரி மன்றில் நேற்று திங்கட்கிழமை மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
அத்துடன் மேற்படி வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் நேற்று (12) தெரிவித்தார்.
மேற்படி வழக்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பாதிரியார்களின் தொலைபேசிப் பாவனையின் பதிவுகள் தொடர்பான அறிக்கையினை 2 நாட்களுக்குள் மன்றில் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் நீதவான் பொலிஸாரிற்கு உத்தரவிட்டார்.
அத்துடன், தாங்கள் மறைக்கல்வி சம்பந்தாகவே கொன்சலிற்றாவுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், தனிப்பட்ட ரீதியில் எவ்விதத்திலும் உரையாடவில்லையெனவும் மன்றில் தெரிவித்தனர்.
யாழ்.குருநகர்ப் பகுதியினைச் சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா (23) கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி குருநகர் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்னாலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
தொடர்ந்து இவருடைய மரணத்திற்கு ஆயர் இல்லத்தில் இருக்கும் இரண்டு பாதிரியார்கள் தான் காரணம் என கொன்சலிற்றாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களினால் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 16 ஆம் திகதி ஆயர் இல்லத்திற்கு முன்னால் கொன்சலிற்றாவின் உறவினர்கள் கொன்சலிற்றாவின் சடலத்தினை வைத்து போராட்டம் செய்தனர்.
மறைக்கல்வி கற்பிப்பதற்குச் சென்ற கொன்சலிற்றாவினை பாதிரியார்கள் பாலியல் தொந்தரவு செய்து கொன்லிற்றாவின் மரணத்திற்கு காரணமாகினர்கள் என அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி மேற்படி வழக்கு நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கொன்சலிற்றாவின் தாய் எனது மகளின் மரணத்திற்கு ஆயர் இல்லத்தில் பாதிரியார்கள் இருவரே காரணம் எனவும், தந்தை எனது மகள் கொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
கொன்சலிற்றா யாழ்.ஆயர் இல்லத்தில் மறைக்கல்வி கற்பித்து வந்த ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating