சதாம் உண்ணாவிரத போராட்டம்
பதவியில் இருந்து துரத்தப்பட்ட ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தன்னுடைய வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். சதாம் உசேன் கைது செய்யப்ட்டு அவர் மீது வழக்கு விசாரணை நடந்து வருகிறது. சதாமுக்கு பிரபல வழக்கறிஞர் ஹமிஸ் அல்_ஒபேய்தி என்பவர் ஆஜராகி வாதாடி வந்தார். அவர் திடீரென்று படுகொலை செய்யப்பட்டுவிட்டார். இதை கண்டித்து சதாம் உசேன் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி உள்ளார். முன்னாள் அதிபர் சதாம் உசேனும் அவரது ஆட்சியின்போது அதிகாரிகளாக இருந்த 50 பேரும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள் என்று தற்போது ஆஜராகி வாதாடி வரும் வழக்கறிஞர் ஹலில் அல்_துலாய்மி தெரிவித்து உள்ளார்.
எங்களுக்கு ஆஜராகி வாதாடும் வழக்கறிஞர்களுக்கு போதுமான பாதுகாப்பை அமெரிக்காவும் இதர சர்வதேச நாடுகளும் அளிக்க வேண்டும் என்று சதானும் அவர்களுடைய ஆதரவாளர்களும் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
சதாம் உசேன் உண்ணாவிரதம் இருந்து வருவது பற்றி அமெரிக்க ராணுவ அதிகாரியிடம் கேட்டதற்கு சதாம் உண்ணாவிரதம் பற்றி தெரியாது என்று கூறிவிட்டார். சதாம் உசேன் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு போதுமான அளவுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று ஐ.நா. சபை மற்றும் அரபு நாடுகளை நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம் என்றும் வழக்கறிஞர் துலாய்மி கூறினார்.
சதாம் உசேனுக்கு ஆஜராகும் வழக்கறிஞர்கள் மிரட்டப்படுகிறார்கள் அல்லது படுகொலை செய்யப்படுகிறார்கள். வழக்கறிஞர் ஹமிஸ் அல்_ஒபேய்தி தன் வீட்டில் இருந்த போது அவரை 20 பேர் கொண்ட கும்பல் வெளியே இழுத்து வந்து துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். அவரை சேர்த்து இதுவரை சதாமுக்கு ஆஜரான 3 வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.