விடுதலைப்புலிகளின் கோரிக்கை ஏற்பு: போர் நிறுத்த கண்காணிப்பு குழுவில் இருந்து 3 ஐரோப்பிய நாடுகளை நீக்க சம்மதம்
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருப்பதை தொடர்ந்து அங்கு மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. ஆனால் போர் மூளாமல் தடுக்கவும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து அமல்படுத்தவும் நார்வே தூதுக்குழு தீவிர முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக இலங்கைக்கான நார்வே தூதர் ஹன்ஸ் பிரட்ஸ்கர் நேற்று முன்தினம் கிளிநொச்சி சென்று விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனை சந்தித்து பேசினார். அப்போது, தங்கள் இயக்கத்துக்கு தடைவிதித்த ஐரோப்பிய ïனியனைச் சேர்ந்த சுவீடன், டென்மார்க், பின்லாந்து ஆகிய 3 நாடுகளை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவில் இருந்து நீக்கவேண்டும் என்று விடுதலைப்புலிகள் தரப்பில் நார்வே தூதரிடம் வற்புறுத்தப்பட்டது. இதற்கு அவர்கள் ஒரு மாதம் கெடு விதித்ததாகவும் தெரிகிறது.
இந்த நாடுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடைவிதித்து இருப்பதால் அவற்றின் நடுநிலை தன்மை குறித்து விடுதலைப்புலிகள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. விடுதலைப்புலிகளின் இந்த கோரிக்கையை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டு உள்ளது.
இது குறித்து இலங்கை அரசின் சமாதான நடவடிக்கை பிரிவு செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- போர் நிறுத்த கண்காணிப்பு குழுவில் இருந்து டென்மார்க், சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகளை நீக்க வேண்டும் என்ற விடுதலைப்புலிகளின் கோரிக்கை நெறிமுறைகளுக்கு விரோதமானது என்ற போதிலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். போர் நிறுத்த கண்காணிப்பை திறம்பட மேற்கொள்ளவேண்டி இருக்கிறது.
அப்படி இருக்கும் போது அந்த நாடுகளை ஒரு மாதத்திற்குள் நீக்கவேண்டும் என்ற கோரிக்கை நியாயமற்றது ஆகும். இதற்கு 6 மாதம் அவகாசம் வேண்டும் என்று நார்வே தூதுக்குழு கேட்டுக்கொண்டு உள்ளது. இதை விடுதலைப்புலிகள் ஏற்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளரும், பத்திரிகை துறை மந்திரியுமான அனுரா யாபா கூறுகையில், போர் நிறுத்த கண்காணிப்பு குழுவில் இருந்து டென்மார்க், பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளை நீக்கவேண்டும் என்ற விடுதலைப்புலிகளின் கோரிக்கை நியாயமற்றது என்றார்.
இதற்கிடையே, புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் கிளிநொச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்; புலிகளின் போராட்டத்தை இந்தியா ஏற்றுக்கொண்டு அங்கீகரிப்பதோடு தார்மீக ஆதரவும் அளிக்க வேண்டும் என்றும் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு நடத்தும் தாக்குதல்களை இந்தியா கண்டிக்க வேண்டும் என்றும் கூறினார். இதுதான் விடுதலைப்புலிகளின் நிலை என்றும் தமிழர்களின் விருப்பம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.