கொன்சலிற்றா மரணம்; சட்டவைத்திய அதிகாரிக்கு நீதிமன்றம் அழைப்பாணை
யாழ்ப்பாணம் குருநகர் பெரிய கோயிலுக்கு பின்புறத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் மரணம் தொடர்பில் சாட்சியமளிக்க யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி சிவரூபனை மன்றில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பெரியகோயிலுக்கு பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் வழக்கு யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி பெ.சிவகுமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன்போது யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பாரிய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி மன்றில் தனது சாட்சியங்களை முன்வைத்தார்.
ஏப்ரல் 14 ஆம் திகதி காலை 10 மணிக்கே குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் சட்ட வைத்திய அதிகாரியினால் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் மன்றில் தெரிவித்தார்.
எனினும் குறித்த யுவதி 13ஆம் திகதி மாலையில் இருந்து காணாமல் போயிருந்தார். எனினும் மறுநாள் இறந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதனால் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு சட்ட வைத்திய அதிகாரியை யூன் மாதம் 10 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Average Rating