சவுதி: ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட எய்ட்ஸ் தொற்றுக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரத்தத்தை செலுத்தியதால் எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு 60 லட்சம் டாலர்களை இழப்பீடாக வழங்க சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது.
8 வயது சிறுவனாக இருந்த போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. குணமடைந்து வீடு திரும்பிய அந்த சிறுவன் வாலிப வயதை எட்டிய போது புதுப்புது உடல் உபாதைகள் தோன்ற ஆரம்பித்தன.
இதனையடுத்து, பரிசோதனை செய்ததில் அவரை எய்ட்ஸ் கிருமிகள் தாக்கியுள்ளது தெரிய வந்தது. அவருக்கு 8 வயதாக இருந்த போது ஏற்றப்பட்ட ரத்தம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்றும், அதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறிய ஆஸ்பத்திரி நிர்வாகம் தனது பொறுப்பை தட்டிக் கழித்து விட்டது.
தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கும், மனம் மற்றும் உடல் உளைச்சலுக்கும் கவனக் குறைவாக செயல்பட்ட ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளிநாடுகளில் வழங்குவதைப் போல் உரிய தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அந்த நபர் சவுதி கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.
சுமார் நான்காண்டு இழுத்தடிப்புக்கு பின்னர், அந்த வழக்கு கீழ் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,அவர் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுவினை தாக்கல் செய்தார். பாதிக்கப்பட்ட நபருக்கு 3 லட்சம் சவுதி ரியால்களை (இந்திய மதிப்புக்கு சுமார் 60 லட்சம் ரூபாய்) இழப்பீடாக வழங்கும்படி ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பை கேட்டதும் இழப்பீடு கோரிய நபர் கதறி அழுது விட்டார். சுமார் 30 ஆண்டுகளாக நோயுடனும் போராடியும், 15 ஆண்டுகள் சட்டத்துடனும் போராட்டம் நடத்திய எனக்கு இந்த சொற்பத் தொகையை வழங்கும்படி கோர்ட் உத்தரவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
இது போன்ற வழக்குகளில் வெளிநாடுகளில் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை (இந்திய மதிப்புக்கு சுமார் 6 கோடி ரூபாய்) இழப்பீடாக வழங்கப்படுகிறது. அதை ஒப்பிட்டு பார்க்கும் போது எனக்கு வழங்கும்படி உத்தரவிட்டுள்ள இழப்பீட்டு தொகை மிக, மிகக் குறைவு என்று அவர் கூறுகிறார்.
Average Rating