கராச்சி சர்வதேச விமான நிலையம் மீது ஆயுததாரிகள் தாக்குதல்; 23பேர் பலி
பாகிஸ்தானில் அமைந்துள்ள மிகப்பெரிய விமான நிலையமான கராச்சி சர்வதேச விமான நிலையம் மீது ஆயுததாரிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகள் நடத்திய இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 23 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இராணுவத்தினருக்கும் துப்பாக்கிதாரிகளுக்கும் இடையில் பல மணித்தியாலங்களாக தொடர்ந்த பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் 10 ஆயுததாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிதாரிகள் வசமிருந்த ஆயுதங்களும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
14 பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆயுததாரிகள் போலியான அடையாள அட்டைகளுடன் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தின் பழைய முனையத்திற்குள் நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, விமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதுடன் அனைத்து விமானங்களும் ஏனைய விமான நிலையங்களுக்கு அனுப்பபட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Average Rating