உத்திரப் பிரதேசத்தில் தொடரும் அவலம்; மரத்தில் தொங்கிய நிலையில் தம்பதியரின் சடலங்கள்
இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மற்றும் கொலைகள், சட்டவிரோதமான செயல்கள் என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
இம்மாநிலத்தில் உள்ள முசேரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷம்பூ(40), இவரது மனைவி கமலா (35). இவர்களிருவரும் நேற்றுமாலை கேஸ்ரேலா பகுதியில் உள்ள கடைத்தெருவிற்குச் சென்றுள்ளனர்.
இரவு வெகுநேரமாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், இன்று காலை இருவரும் ஊருக்கு வெளியில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டனர்.
இதனைக் கண்ட அவர்களது உறவினர்கள் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலங்களைக் கைப்பற்றியதுடன் மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
இவர்கள் இருவரையும் எவரேனும் கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டிருக்கலாம் என அவர்களது உறவினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
ஆனால், இவர்கள் இருவருக்கும் அளவுக்கு மீறிய மன அழுத்தம் இருந்ததாகவும் அதனால் தான் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இவ்விரண்டு கோணங்களின் அடிப்படையிலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating