பம்பலப்பிட்டியில் தமிழ் வயோதிபரை தாக்கி, 2 இலட்சம் ரூபா மோதிரங்கள் பறிப்பு
கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் தமிழ் வயோதிபர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான மோதிரங்கள் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4.15 மணியளவில் பம்பலப்பிட்டி காலி வீதியில் பொதுமக்கள் பலரும் பார்த்திருக்க பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சிலர் அவரை கடுமையாகத் தாக்கி ஆட்டோவில் ஏற்றிச் சென்று அவர் அணிந்திருந்த இரு மோதிரங்களை அபகரித்துள்ளனர்.
இது பற்றி பாதிக்கப்பட்ட சிவகுமார் (63 வயது) என்பவர் கூறுகையில் ;
காலி வீதியால் மாலை 4.16 மணியளவில் கோயிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது கொண்டை வளர்த்த ஒருவர் திடீரென வந்து எனது கையை இறுகப் பிடித்து தான் சி.ஐ.டி.எனவும் விசாரணை நடத்த வேண்டுமெனவும் என்னை மிரட்டினார்.
அவர் ஒருமோசடிப் பேர்வழி என்பதை தெரிந்து, அவரிடமிருந்து விடுபட முயற்சித்தபோது அவர் தனது பிடியை விடாது என்னைக் கடுமையாக மிரட்டினார்.
அப்போது வேறொரு ஆசாமியும் அவருடன் சேர்ந்து என்னை கடுமையாக தாக்கியபோது நான் உதவிகோரி குரலெழுப்பினேன்.
பலரும் அதனை பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர ஒருவரும் உதவ வரவில்லை. அவர்கள் என்னை தாக்கினார்கள்.
அவ்வேளையில் அவ்விடத்திற்கு ஆட்டோ ஒன்று வந்து நிற்கவே என்னிடமிருப்பவற்றை அபகரிக்கவே அவர்கள் முயற்சிப்பது தெரிந்தது.
அவர்கள் என்னை ஆட்டோவில் கொண்டு சென்று ஏதாவது செய்துவிடலாமென்ற அச்சத்தில் என்னை ஒன்றும் செய்யாதீர்கள் இருப்பவற்றையெல்லாம் தந்து விடுகின்றேனெனக் கெஞ்சினேன்.
ஆனால் அவர்கள் என்னை அந்த ஆட்டோவினுள் இழுத்துத்தள்ளி ஏற்றினார்கள்.
நான் முரண்டு பிடிக்கவே என்னை தாக்கி ஆட்டோவுக்குள் தள்ளி ஏற்றிக் கொண்டு என்னிடமிருந்த பெறுமதிமிக்க இரு மோதிரங்களையும் ( ஒன்று நவரத்தினக் கல் பதித்த சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியானது
மற்றையது சுமார் 50,000 ரூபா பெறுமதியான எனது திருமண மோதிரம்) பறித்துக் கொண்டு சுமார் 300 மீற்றர் தூரத்தில் காலி வீதியில் கொண்டு சென்று ஆட்டோவிலிருந்து கீழே தள்ளிவிட்டுச் சென்று விட்டனர்.
இது பற்றி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவே உடனடியாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனது ஜீப்பில் என்னை ஏற்றிக் கொண்டு அந்தப் பகுதியில் சகல இடங்களிற்கும் கூட்டிச் சென்றபோதும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமாரா பதிவுகளை என்னிடம் காணப்பித்தபோதும், என்னை தாக்கிய சம்பவம் அவற்றில் இருக்கவில்லை.
என்னை தாக்கி மோதிரங்களை பறித்தவர்களை என்னால் நன்கு அடையாளம் காட்ட முடியுமென பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
Average Rating