கொல்கத்தாவில் மீன் பிடிக்கச் சென்றவரை, தாக்கிக் கொன்ற புலி
வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் எல்லைப்புறத்தில் உள்ள சுந்தரவனக் காடுகள் புலிகளுக்கான ரிசர்வ் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அந்தப் பகுதியில் மீன் பிடிப்பதுவும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதனையும் மீறி ஆபத்தான அந்தப் பகுதிகளில் நடமாடுவது என்பது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதை நேற்று நடந்துள்ள ஒரு சம்பவமும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. புலிகளால் மனிதர்கள் தாக்கப்படுவது இந்த ஆண்டில் இது நான்காவது முறையாகும்.
சுஷில் மஜ்ஹி என்ற 62 வயது முதியவர் தத்தா நதிக்கரையில் உள்ள லஹ்ரிபூர் என்ற இடத்தில் வசித்து வந்தார். இவருக்கு ஜ்யோதிஷ் என்ற 40 வயது மகனும், மோலினா என்ற வளர்ப்பு மகளும் உள்ளனர்.
நேற்று காலை இவர்கள் மூவரும் ஒரு படகில் கோலக்கலி காடுகளுக்குள் செல்லும் சிற்றோடை ஒன்றில் நண்டுகள் பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.
படகின் ஒரு புறத்தில் ஜ்யோதிஷும் மற்றொரு புறத்தில் மோலினாவும் நடுவில் அந்த முதியவரும் அமர்ந்திருந்தனர். பாதுகாப்பான பகுதியைத் தாண்டி வனப்பகுதிக்குள் சென்றபோது அவர்கள் வித்தியாசமான வாசனையுடன் கூடிய ஒரு சூழலை உணர்ந்துள்ளனர்.
உடனடியாகப் பாதுகாப்பான பகுதிக்குத் திரும்ப முயன்றபோது அவர்கள் படகின் மீது பாய்ந்த புலி ஒன்று முதியவரை வாயால் கவ்வி இழுத்துள்ளது.
அதிர்ச்சியில் உறைந்துபோன அவரின் மகனும், மகளும் சுதாரித்து புலியைத் தாக்க முற்பட்ட போதும் அது தன் பிடியை வலுவாக்கிக் கொண்டு வெளியே குதித்து அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் அந்த முதியவரை இழுத்துச் சென்றுவிட்டது.
இவர்களின் சத்தம் கேட்டு உதவிக்கு வந்த மற்ற மீன்பிடியாளர்களும் காட்டுப்பகுதிக்குள் செல்ல முன்வரவில்லை. மஜ்ஹியின் உடலை மீட்டுக் கொண்டுவருவது என்பது சாத்தியமான செயலாகப்படவில்லை.
சம்பவத்தைப் பார்த்த அதிர்ச்சியில் மயக்கமடைந்த மோலினாவையும், முதியவரின் மகனையும் அவர்கள் பத்திரமாக வெளியே கூட்டிவந்தனர்.
மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ள பகுதியில் மக்கள் துணிச்சலாகப் போவது ஆபத்தையே அளிக்கின்றது என்று சம்பவம் பற்றி குறிப்பிட்ட சுந்தரவனக் காடுகளின் புலிகள் காப்பகத்தின் இயக்குனர் சௌமித்ரா தாஸ்குப்தா தெரிவித்தார்.
Average Rating