குழந்தை திருமணத்தை நடத்தினாலும், அதற்கு போனாலும் தண்டனை!!!
திருமண வயதினை அடையாத பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டத்தில் நடைபெறவிருந்த குழந்தைகள் திருமணம் கலெக்டரின் உத்தரவுப்படி மாவட்ட சமூக நல அலுவலரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
மேலும் குன்னூரில் நடைபெறவிருந்த குழந்தை திருமணம், குழந்தைகள் உதவி மையம் மூலம் நிறுத்தப்பட்டது. குழந்தை திருமண தடைச்சட்டம் 2006 இன் படி மணமகளுக்கு 18 வயதும், மணமகனுக்கு 21 வயதும் பூர்த்தியடையாமல் உள்ளவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும்.
18 வயது நிரம்பாத பெண்ணை திருமணம் செய்யும் ஆணுக்கு அதிகப்பட்சமாக 2 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது 1 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். குழந்தை திருமணத்தை நடத்தி வைப்போரும், திருமணத்தில் பங்கு கொண்டாலோ அல்லது ஆதரித்தாலோ அவர்களும் தண்டனைக்கு ஆளாக்கப்படுவார்கள்.
இக்குற்றம் ஜாமீனில் விடுவிக்க இயலாத குற்றம் ஆகும். குழந்தைத் திருமணம் நடைபெற்றால் குழந்தை திருமண தடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலரிடம் தகவல் தெரிவிக்கலாம். மற்றும் குழந்தை உதவி மைய தொலைபேசி 1098 க்கு தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
Average Rating