நாமக்கல் அருகே கழுதை பால் சங்கு ரூ.30-க்கு விற்பனை!!
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் கழுதை பால் ஒரு சங்கடை (சங்கு) ரூ.30–க்கு அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெளியூரை சேர்ந்த சிலர் குட்டி போட்ட பெண் கழுதைகளை மோகனூர் பகுதிக்கு ஓட்டி வந்து, ஆங்காங்கே இரவு நேரத்தில் தங்கி, காலை நேரங்களில் கழுதைகளை கிராமம் கிராமமாக ஓட்டிச் சென்று கழுதை பாலை விற்பனை செய்து வருகின்றனர். குழந்தைகளுக்கு பால் கொடுக்கப் பயன்படும் ஒரு சங்கடை (சங்கு) அளவு உள்ள கழுதை பால் ரூ.30–க்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்த பால் பழுப்பு நிறத்தில் ஒட்டகப்பாலைப் போல உள்ளது.
இந்த பாலை குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகவும், மஞ்சள் காமாலை பிடித்தவர்கள் இந்த பாலை அருந்தினால் நோய் முற்றிலும் குணமடைவதாகவும், அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பால் அருமருந்தாகும், சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் உடையவர்கள் பாலை பருகினால் நோய் முழுமையாக குணமடைவதாவும், அவர்கள் கூறுகின்றனர். இதில் ஒரு வகையான மருத்துவ குணம் உள்ளதாகவும், பாலை கறந்தவுடன் அந்த சூட்டுடனே குடிக்க வேண்டும் என்று அவர்கள் பொது மக்களிடம் தெரிவித்து இந்த பாலை விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்கள் மோகனூர், மணப்பள்ளி, பாலப்பட்டி, ஆகிய பகுதியில் தங்கி கழுதை பாலை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக எஸ்.வாழவந்தி கிராமத்தில் தங்கி அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு கழுதைகளை ஓட்டிச் சென்று கழுதை பாலை விற்பனை செய்து வருகின்றனர். அந்த பாலை கிராமத்தில் இருக்கும் சிலர் காசு கொடுத்து வாங்கி குடிக்கின்றனர். இந்த பாலுக்கு மருத்துவ குணம் உண்டா, இல்லையா? என்று மருத்துவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Average Rating