வேறு கம்பெனியின் தயாரிப்பு ரகசியத்தை திருடி விற்றவருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை!!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஓக்லாந்தில் வசித்து வருபவர் லியு (வயது 56). இரசாயன பொறியாளரான லியு அமெரிக்காவில் செயல்பட்டு வரும் டுபோன்ட் பெயின்ட் நிறுவனத்தைப் போன்ற சிறிய அளவிலான ஒரு நிறுவனத்தை கடந்த 1990-ம் ஆண்டு கலிபோர்னியாவில் துவக்கினார்.
டுபோன்ட்டிலிருந்து ஒய்வு பெற்ற பொறியாளர்களைத் தனது நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தி வெண்மை நிறமிகளான டைட்டானியம் டையாக்ஸைட் தயாரிப்பு ரகசியத்தை அறிந்து கொண்டார். இந்தத் தயாரிப்பு முறையே கார்கள், காகிதம் உட்பட பல தினசரித் தேவைகளில் உள்ள வெள்ளை நிறத்தை அளிக்கக்கூடிய அடிப்படை மூலாதாரப் பொருள் ஆகும். பின்னர் இந்தத் தயாரிப்பு ரகசியத்தை சீன அரசு கட்டுப்பாட்டில் வரும் நிறுவனங்களுக்கு விற்றதன்மூலம் லியு 28 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 2011-ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட லியு மீதும் அவரது மனைவி கிறிஸ்டினா லியு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜாமீன் பெற்ற சில மாதங்களைத் தவிர இதுநாள்வரை லியு சிறைச்சாலையிலேயே காலத்தைக் கழித்துள்ளார். இவரது விசாரணையின் மீதான தீர்ப்பு ஒக்லாந்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற நீதிபதியான ஜெப்ரே ஒயிட்டால் நேற்று வெளியிடப்பட்டது.
மலேசியாவில் வாழ்ந்த சீனப் பெற்றோர்களுக்குப் பிறந்திருந்தாலும் இயற்கையிலேயே அமெரிக்கக் குடிமகனான இருந்த லியு பேராசையினால் தனது வளர்ப்பு நாட்டிற்கு எதிராகத் திரும்பியதாக நீதிபதி குறிப்பிட்டார். இவரது நிறுவனம் பறிமுதல் செய்யப்படுவதாகவும், இவர் பெற்ற 28.3 மில்லியன் டாலர் தொகை டுபோன்ட் நிறுவனத்திற்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்த அவர் லியுவின் மனைவிக்கும் 18.9 மில்லியன் டாலர் அபராதம் விதித்தித்துள்ளார்.
டுபோன்ட்டிலிருந்து வெளிவந்து இவருக்கு உதவிய இரண்டு பொறியாளர்களும் கூட பொருளாதார உளவு குற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இந்த சதியில் பங்கிருப்பதாக ஒப்புக்கொண்டு கையெழுத்திட வேண்டிய நிலையில் கடந்த 2012-ல் மற்றொரு பொறியாளர் தற்கொலை செய்துகொண்டார்.
லியு பெற்ற பணத்தில் பெரும்பான்மையான தொகை நாட்டை விட்டு வெளியேறிவிட்டது என்று குறிப்பிட்ட நீதிபதி ஒயிட் லியு முழு தொகையையும் திரும்ப செலுத்துவது கடினம் என்றே தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பல விஷயங்களை வித்தியாசமாகச் செய்ய விரும்பியதாகக் கூறிய லியு தனது நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
Average Rating