கடற்றொழிலுக்கு போவதாக கூறிச் சென்றவர், மீன் வாடியில் சடலமாக மீட்பு!!
கடற்றொழிலுக்கு செல்வதாக சகோதரியிடம் கூறிச் சென்ற கடற்றொழிலாளி ஒருவர் பருத்தித்துறை சுப்பர் மடத்தடியில் உள்ள மீன்வாடி ஒன்றில் வாயில் இரத்தம் வடிந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டார்.
தாளையடி ஆழியவளை பாடசாலை வீதியை சொந்த இடமாகக் கொண்டவரும் அரிஞ்ச அம்மன் கோவிலடி வியாபாரி மூலையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சதாசிவம் (40 வயது)என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸாரின் தகவலின் பேரில் நேரில் சென்று சடலத்தைப் பார்வையிட்டு மரண விசாரணை மேற்கொண்ட பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா சடலத்தை பருத்தித் துறை அரசினர் ஆதார வைத்திய சாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாரை பணித்து பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
மரண விசாரணையின் போது இறந்தவரின் சகோதரி வதனா ஜெகதீஸ்வரன் (35வயது) சாட்சியமளிக்கையில் இறந்த சகோதரன் பருத்தித்துறையில் எனது வீட்டில் தங்கியிருந்து கடற்றொழில் செய்து வந்தார். நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மதிய உணவை முடித்துக் கொண்டு கடற்றொழிலுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார். ஆனால் இன்றுக் காலை (புதன்) வீடு திரும்ப வேண்டியவர் வீடு திரும்பவில்லை.
ஆனால், அவர் மீன்வாடியில் வாயில் இரத்தம் வடிந்த நிலையில் இறந்து கிடப்பதாக அறிந்த நானும் தாயாரும் சென்று பார்வையிட்டோம் எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்குப் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட மரணவிசாரணை அதிகாரி மேல் விசாரணையை ஒத்திவைத்தார்.
Average Rating