பல கொடுமைகளை அம்பலப்படுத்திய பாடகியின் மரணம்!!
30 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பழமைவாத சமூகம் நிரம்பிய பெரு நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பொதுவாக விமர்சனங்கள் எழுவதில்லை.
பெண்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களோ, உள்நாட்டு வன்முறைகளோ தனியார் விஷயங்களாகக் கருதப்படுவதால் பொலிஸிலும் பெரிதாகப் புகார்கள் பதிவாவது இல்லை.
ஆனால் கடந்த மார்ச் மாதம் மூளையில் இரத்தக்கசிவு என்று அந்நாட்டின் பிரபல தொலைக்காட்சி பாடகி எடிடா குரேரோ (வயது 30) மருத்துவமனையில் இறந்தபோது அவரது கணவர் பால் ஒலோர்டிகா அவரை அடித்தே கொன்றுவிட்டார் என்ற தகவல் வெளிவந்தது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அவர் தற்போது ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்து கொண்டேயிருக்கின்றார் என்று பொலிஸ் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இதற்கிடையே கடந்த மே மாதம் தலைநகர் லிமாவில் கூட்டம் நிறைந்த பேருந்து ஒன்றில் சென்றுகொண்டிருந்த நடிகையும், பாடகியுமான மகலி சோலியர் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாகத் தெரிவித்தார்.
இந்த இரண்டு சம்பவங்களும் அங்கு பெரும் விவாதத்திற்கு உள்ளாயின.
ஆனால் இது போன்ற சம்பவங்களுக்கு தரப்படும் புகார்கள் மிகவும் குறைவு என்பதால் பெரு அரசிடம் இவற்றின் கணக்கீடுகள் மிகவும் குறைவாகவே உள்ளது.
இத்தகைய துன்பங்களினால் 131 பெண்கள் கொலைக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்றும் அதில் பெரும்பான்மையானோர் 18-லிருந்து 34 வயதுக்குட்பட்டவர்கள் என்று பெண்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெண்கள் தங்களுக்கு நேரும் கொடுமைகளை அமைதியாக ஏற்றுக்கொள்ளாமல் பொலிஸாரிடம் புகார் அளிக்கவேண்டும் என்று மனுவெலா ரமோஸ் என்ற பெண்கள் உரிமைக் குழுவின் தலைவியான மிலேனா ஜஸ்டோ தெரிவித்தார்.
பெண்கள் நலத்துறை அமைச்சரான கர்மென் ஒமோண்டே அங்கு பிரபலமாக விளங்கும் தேசிய பெண்கள் கைப்பந்து அணியின் பயிற்சியாளர் நடாலியா மலகாவுடன் இணைந்து பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக முன்நிற்கும் வண்ணம் ஒரு ஊக்குவிப்பு திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
இந்த மாத ஆரம்பத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டபோது பெண்கள் தங்களுக்கான மரியாதையைப் பெறவும், பேசவும் முன்வர வேண்டும் என்று மலகா குறிப்பிட்டார்.
Average Rating