பாலியல் வழக்கில் இத்தாலி முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி விடுதலை: மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!!
இத்தாலியில் நான்கு முறை பிரதமர் பதவி வகித்தவரும், மத்தியில் ஆட்சியில் உள்ள மைய வலதுசாரிக் கட்சியின் மீது செல்வாக்கு கொண்டவருமான சில்வியோ பெர்லுஸ்கோனி(77) மீது வரி மோசடி, ஊழல், செக்ஸ், பதவி துஷ்பிரயோகம் என்று பல வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவற்றில் வரி மோசடி வழக்கில் கடந்த ஆண்டு நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை தீர்ப்பு பெற்ற அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார்.
இருப்பினும் அவரது வயது கருதி பொது மன்னிப்பின் கீழ் இந்தத் தண்டனை ஒரு வருட சமூக சேவையாக மாற்றப்பட்டது. இதனால் அவரால் அங்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சுதந்திரமாகப் பிரச்சாரம் செய்யவும், அரசியல் பங்காற்றவும் முடிந்தது.
பெர்லுஸ்கோனி மீதான செக்ஸ் மற்றும் பதவி துஷ்பிரயோகம் குறித்த வழக்குகளின் தீர்ப்பு மீதான மறுவிசாரணை இன்று மிலனில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு வந்தது. ஏழு வருட சிறைத்தண்டனையும், பொது பதவிகளிலிருந்து விலக்கமும் அளித்திருந்த தீர்ப்பாயத்தின் தீர்ப்பை இன்று மிலன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சுருக்கமான அறிக்கை மூலம் இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து பெர்லுஸ்கோனியை விடுவித்த நீதிபதிகளின் விரிவான அறிக்கை 90 நாட்களில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்லுஸ்கோனி எதிர்கொண்ட பரபரப்பான விசாரணை இது என்று கூறப்பட்டபோதிலும் இதுவே இறுதித் தீர்ப்பாக இருக்காது என்று கூறப்படுகின்றது. அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் இத்தாலியின் உச்ச நீதிமன்றத்தில் முறையிடக்கூடும் என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன. ரூபி விசாரணை எனப்படும் இந்த இறுதி விசாரணையின் முடிவுகள் அவரது அரசியல் நடவடிக்கைகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இதுபோன்ற குற்றவியல் வழக்கில் இரண்டாவது உறுதியான தீர்ப்பின்போது பொது மன்னிப்பு நீக்கப்பட்டு அவரது தண்டனையை வீட்டுக் காவலில் பெர்லுஸ்கோனி கழிக்கவேண்டியிருக்கும் என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன.
Average Rating