குடும்ப தகராறில் தீ குளித்த பெண்: காப்பாற்ற சென்ற கணவரும் உடல் கருகினார்!!
சேலம் தாதகாப்பட்டி செல்லகுட்டி காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (42). இவரது மனைவி மகேஸ்வரி (38). இவர்களுக்கு மெய்யழகன் (22) என்ற மகனும், ஜீவிதா (23) என்ற மகளும் உள்ளனர். ஜீவிதா திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வருகிறார்.
கோவிந்தராஜ்–மகேஸ்வரி ஆகியோர் ஒரு துணி ஏற்றுமதி நிறுவனத்தில் டெய்லராக வேலைப்பார்த்து வருகிறார்கள். குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று நள்ளிரவு 11 மணியளவில் கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து கோவிந்த ராஜ் வீட்டிற்கு வெளியே வந்து படுத்து கொண்டு இருந்தார். அப்போது வீட்டிற்குள் இருந்த மகேஸ்வரி மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். வலி தாங்க முடியாத அவர் அலறினார். சத்தம் கேட்டு ஓடிச்சென்று கோவிந்தராஜ் தீயை அணைக்க முயன்றார். அப்போது அவருக்கும் தீ காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அக்கம், பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் 2 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து அன்னதானப்பட்டி எஸ்.ஐ. தியாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating