விவாகரத்து வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு மனைவி ஜீவனாம்சம் வழங்க கோர்ட் உத்தரவு!!
பொதுவாக விவாகரத்து வழக்கு என்றாலே பாதிக்கப்படும் மனைவியின் வாழ்வாதாரத்திற்காக கணவன் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தரவிடுவதையே பார்த்திருக்கிறோம். ஆனால், கணவனுக்கு மனைவி ஜீவனாம்சம் வழங்கும் தீர்ப்பு என்பது மிக அரிதாகவே இருக்கும்.
அந்த வகையில் குஜராத் மாநிலம் காந்தி நகர் குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விவாகரத்து வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு அவரது மனைவி ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் தல்பீர் சிங். சச்சின் டெண்டுல்கருடன் 17 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம்பெற்று விளையாடிய தல்பீர் சிங், 2002ம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கி கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரது கிரிக்கெட் கனவு தகர்ந்தது. 2010ம் ஆண்டு அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்தபோது அந்த செலவுத்தொகையை சச்சின் வழங்கினார்.
இந்நிலையில் சிகிச்சைக்குப் பின்னர் அவரை அவரது மனைவி ரஜ்வீந்தர் கவுர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தியுள்ளார். நடக்க முடியாமல் இருந்த அவரை வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளார். இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை போலீசார் மீட்டனர். பின்னர் காந்தி நகர் குடும்பநல நீதிமன்றத்தில் தல்பீர் சிங் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளித்த நீதிபதி டி.டி.சோனி, தல்பீர் சிங்கிற்கு அவரது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார். மேலும், தல்பீர் சிங்கிற்கு அவரது மனைவி மாதம் ரூ.10 ஆயிரம் ஜீவனாம்சம் தரவும் உத்தரவிட்டார்.
Average Rating