நகைப்பறித்தவனின் கையை பிடித்து இழுத்த பெண்: நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் விழுந்ததால் சிக்கிய திருடன்!!
கோவை கவுண்டம் பாளையம் அருகே உள்ளது கவுண்டர் மில்ஸ். இங்குள்ள பஸ் நிறுத்தத்திற்கு ஒரு பெண் வேலைக்கு செல்ல அவசரஅவசரமாக வந்தார். பஸ் ஏற முயன்றபோது துடியலூரில் இருந்து காந்திபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.
திடீரென அந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த நகையை பின்னால் அமர்ந்திருந்தவன் பறித்தான். அதிர்ச்சியடைந்த அந்த பெண் நகையை இறுக்கி பிடித்துக்கொண்டு நகையை பறித்தவனின் கையை பிடித்து இழுத்தார். இதனால் மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடியது. சிறிது தூரத்தில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் விழுந்தது.
திருடன்… திருடன்… என்ற அந்த பெண் சத்தம்போட்டார். அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் 2 வாலிபர்களையும் மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அதில் ஒருவன் அங்கு வந்த பஸ்சில் ஏறி தப்பித்தான்.
பிடிபட்ட மற்றொருவனை பொதுமக்கள் துடியலூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்டவன் நெல்லையை சேர்ந்த பிரகாஷ் (வயது 19) என்பதும் தப்பி ஓடியவன் பிரவீன் பிரபு (19) என்பதும் தெரிய வந்தது.
நகைபறிப்பு கொள்ளையர்கள் கல்லூரி அல்லது பாலிடெக்னிக் மாணவர்களாக இருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகப்படுகிறார்கள். தொடர் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னரே முழு விபரம் தெரிய வரும்.
Average Rating