குடிபோதையில் ஓடும் ரெயிலில் சிறுமியை பாலியல் தொல்லை செய்த தொழிலாளி!!
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சிவில் என்ஜினீயர்.
இவர் கடந்த 19–-ந்தேதி இரவு தனது 2 பெண் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூருக்கு சென்றார். அங்கு கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அன்று இரவு திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு பஸ்சில் வந்து, அங்கிருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு புறப்பட்டார். இரவு நேரத்தில் சுரேஷ் குடும்பத்தினர் ரெயிலில் அயர்ந்து தூங்கினர். அருகில் அவருடைய 2 பெண் குழந்தைகளும் நன்கு தூங்கி கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை 3.30 மணியளவில் விருத்தாசலம் அருகே ரெயில் வந்து கொண்டிருந்தது. சுரேசின் 5 வயது குழந்தை திடீரென்று அழுதது. அந்த அழுகை சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து சுரேஷ் மற்றும் அதே பெட்டியில் பயணம் செய்த மற்ற பயணிகள் எழுந்தனர். அப்போது அந்த ரெயிலில் பயணம் செய்த ஒருவர் அவசர, அவசரமாக ரெயிலில் இருந்து கீழே இறங்க முயன்றார்.
உடனே ரெயில் பயணிகள் அனைவரும் அவரை சுற்றி வளைத்து மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அதில் அந்த ஆசாமி, தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் அனைவரும் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
இதற்கிடையில் அந்த ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து அவரை விழுப்புரம் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த உதயகுமார் (40) என்றும் அதே பகுதியில் தனியார் அச்சகத்தில் ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
மேலும் உதயகுமாருக்கு சொந்த ஊர் அரியலூர் என்றும் ரெயிலில் வைத்து மது குடித்ததால் போதை தலைக்கேறியதும் அதே பெட்டியில் பயணம் செய்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது.
இதையொட்டி விழுப்புரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்து விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவரை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Average Rating