மண்ணடியில் தொழுகை நடத்துவதில் மோதல்: 50 பேர் மீது வழக்கு!!
மண்ணடி, அங்கப்ப நாயக்கன் தெருவை சேர்ந்தவர் சம்சுகனி. அதே பகுதியில் 5 மாடி கட்டிடத்தில் ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
நேற்று இரவு ஆடை ஏற்றுமதி நிறுவனத்தின் மாடியில் ரமலான் மாத நோன்பையொட்டி சிறப்பு தொழுகைக்கு சம்சுகனி ஏற்பாடு செய்து இருந்தார். இதில் பெண்கள் உள்பட 200–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திடீரென அங்கு 50–க்கும் மேற்பட்ட மற்றொரு தரப்பினர் திரண்டு வந்தனர். அவர்கள் ‘‘வழிபாடு முறை சரியில்லை. உடனே நிறுத்த வேண்டும்’’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தொழுகை நடத்தியவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறை ‘100’–க்கு போனில் புகார் செய்தனர். போலீசார் வருவதை அறிந்ததும் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தரப்பினர் அங்கு இருந்த காவலாளியை தாக்கி விட்டு கண்காணிப்பு காமிராவையும் சேதப்படுத்தி தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து வடக்கு கடற்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தேவராஜ் 50 பேர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மோதல் ஏற்படாமல் இருக்க மண்ணடி பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
Average Rating