பெற்றோர் வீட்டுக்கு புறப்பட்டு சென்ற பெண் மாயம்!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மங்களம் பாளையம் ஆலமரத்து தோட்டத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் யோகராஜ் (வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார்.
இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் பழனி கோட்டத்துரையை சேர்ந்த உறவினர் பெண் கவுதமிக்கும் (19) கடந்த 1 வருடத்துக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு மனைவியை தாராபுரத்தில் பெற்றோருடன் தங்க வைத்த யோகராஜன் கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
வாரத்துக்கு ஒருமுறை விடுமுறை நாளன்று கோவையிலிருந்து தாராபுரத்துக்கு சென்று மனைவியை பார்த்து வருவது வழக்கமாக கொண்டு இருந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கவுதமியின் செல்போனுக்கு யோகராஜன் முயற்சி செய்தும் அது எப்போதும் பிசியாகவே இருந்தது.
இதுகுறித்து யோகராஜன் மனைவியிடம் கேட்டபோது தனது தந்தையிடம் பேசுவதாக கூறினார். அதுகுறித்து யோகராஜன் தனது மாமனாரிடம் விசாரித்த போது அது பொய் என தெரிய வந்தது. இதையடுத்து கவுதமியை யோகராஜன் கண்டித்தார்.
இந்நிலையில் கோட்டத் துரையில் உள்ள பெற்றோரை பார்க்க விரும்புவதாக மாமனார் வேலுச்சாமியிடம் கவுதமி கேட்டார். இதையடுத்து கவுதமியை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்த வேலுச்சாமி தாராபுரம் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு பழனி பஸ் ஏறி ஊருக்கு செல்லும்படி கூறிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
கவுதமி ஊருக்கு செல்லும் தகவலை கோவையில் உள்ள மகன் யோக ராஜூவுக்கும் வேலுச்சாமி தெரிவித்தார். கவுதமி ஊருக்கு சென்றடைந்துவிட்டாரா ? என அறிய யோகராஜன் மனைவியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார்.
ஆனால் அந்த எண் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த யோகராஜன் கவுதமியின் தந்தை செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு மனைவி குறித்து கேட்டார்.
அப்போது கவுதமி அங்கு வரவில்லை என தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கோவையிலிருந்து தாராபுரம் வந்த யோகராஜன் பஸ் நிலையம் பகுதியில் மனைவியை தேடினார்.ஆனால் அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
தாராபுரம் போலீசில் ஊருக்கு புறப்பட்ட மனைவியை காணவில்லை. அவரை யாராவது கடத்தி சென்றிருக்கலாம்? என புகார் செய்தார். போலீசார் பெண் மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating