கற்பை நிரூபிக்க பழுக்க காய்ச்சிய கம்பியை கையில் பிடிக்கும்படி பெண்ணை கட்டாயப்படுத்திய கணவன் குடும்பம்!!
மத்திய பிரதேசத்தில் ஒரு பெண்ணின் கற்பை நிரூபிக்க, பழுக்க காய்ச்சிய கம்பியை கையில் பிடிக்கும்படி அவரது குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பூனம் என்ற பெண் (25), 2007ம் ஆண்டு குணால் என்பவரை திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பிறகு வரதட்சணை கேட்டு பூனத்தை அவரது கணவன் வீட்டார் கொடுமைப்படுத்தியுள்ளனர். அத்துடன் அவர் நடத்தை மீதும் சந்தேகம் கொண்டனர்.
இவ்வாறு பிரச்சினை மேல் பிரச்சினையை சந்தித்தாலும் கணவனுடன் வாழ்வதையே பூனம் விரும்பினார். ஆனால், அவரை எப்படியாவது கழற்றி விட வேண்டும் என்பதில் குறியாக இருந்த கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர், அவர்களின் சமுதாய பஞ்சாயத்தை கூட்டி அக்னி பரீட்சை நடத்தினர்.
அப்போது, “கணவனுடன் நீ தொடர்ந்து வாழ வேண்டும் என்று விரும்பினால் பழுக்க காய்ச்சிய கம்பியை கையில் பிடிக்க வேண்டும்” என்று வற்புறுத்தியுள்ளனர். இதற்கு உடன்பட மறுத்ததால் பூனம் மற்றும் அவரது பெற்றோரை கடந்த ஜனவரி மாதம் முதல் சமூகத்தை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பூனம் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, பூனத்தின் கணவர், மாமியார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
Average Rating