சன்னியாசிகளை அவதூறாக சித்தரிக்கும் சொர்க்கம் என் கையில் படத்துக்கு தடை கேட்டு வழக்கு!!
இந்து தர்மா சக்தி என்ற அமைப்பின் செயலாளர் என்.தேவசேனாதிபதி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
சொர்க்கம் என் கையில் என்ற திரைப்படத்தை பெங்களூரை சேர்ந்த மதன்பட்டேல் என்பவர் இயக்கி, தயாரித்துள்ளார். இந்த படத்தில், இந்து மத சன்னியாசிகள் பெண் பக்தர்களை மயக்குவது போல பல அவதூறு காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்து மதத்தில் சன்னியாசிகள், கடவுளின் தூதர்களாக கருதப்படுகின்றனர். ஆனால், இந்த படத்தில் அந்த சன்னியாசிகளை கேவலப்படுத்தும் விதமாக காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இந்த படம் முதலில் கன்னட மொழியில் தயாரிக்கப்பட்டது. ஆனால், இந்த படம் பொதுமக்கள் பார்ப்பதற்கு தகுதியில்லை என்று கர்நாடக மாநில திரைப்பட தணிக்கை குழு கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 30-ந் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, இந்த படத்தை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து, சொர்க்கம் என் கையில் என்ற தலைப்பில் படத்தை வெளியிட உள்ளனர். இதற்கான தணிக்கை (சென்சார் போர்டு) சான்றிதழையும் பெற்றுள்ளனர்.
எனவே, இந்த படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்ப பெறவேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். சொர்க்கம் என் கையில் படத்தை வெளியிட அந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான மதன்பட்டேலுக்கு தடை விதிக்க வேண்டும். இந்து மத சன்னியாசிகளை அவதூறாக சித்தரித்துள்ள மதன்பட்டேல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் ஜி.பாலா டெய்சி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர், திரைப்பட தணிக்கை துறை தலைவர், போலீஸ் கமிஷனர், படத்தின் தயாரிப்பாளர் மதன்பட்டேல் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
Average Rating