ஒபாமா அளிக்கும் விருந்தில் பங்கு பெறும் மும்பை தடகள வீராங்கனை!!
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரும் 31ஆம் தேதியன்று உலகம் முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 12 ஊனமுற்ற மக்களுடன் சிறப்பு விருந்து ஒன்றினை மேற்கொள்ளுகின்றார். இதற்காக இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளவர் மும்பையின் கோரேகான் பகுதியில் வாழும் நேஹா பி நாயக் என்ற தடகள விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் சிறப்புத் தகுதி வாய்ந்தவர்களுக்கான 100 மீ ஓட்டப்பந்தயத்திலும், ஷாட் புட் பந்தயங்களிலும் பங்கு பெற்றதோடு இவர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் சர்வதேச குளோபல் தூதுவராகவும் பணியாற்றியவர் ஆவார்.
நாளை தனது 24ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் நேஹா இது தனக்குக் கிடைத்த பிறந்த நாள் பரிசு என்றும் சிறந்த மரியாதை என்றும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இந்த விருந்துக்கு நேஹாவுடன் அவரது வழிகாட்டியும் ஆசிரியருமான ஜோனிதா ரோட்ரிகஸ்(33) உடன் செல்கின்றார். இவர் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான ஸ்ரீ தேவ்ரஜி குன்டெச்சா புனர்வஸ் சிறப்புப் பள்ளியில் பணிபுரிகின்றார்.
கோவாவைத் தங்களது பிறப்பிடமாகக் கொண்ட இந்தக் குடும்பம் தற்போது மும்பையில் வசித்துவருகின்றது. பிறந்தபோது சாதாரணமாக இருந்த நேஹா ஐந்து வயதாக இருந்தபோது ஏற்பட்ட காய்ச்சல் ஒன்றில் மன வளர்ச்சி பாதிக்கப்பட்டார் என்று அவரது தாய் ஆஷா தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சிறப்புப் பள்ளியில் சேர்க்கப்பட்ட நேஹா படிப்பில் சுமாராக இருந்தபோதிலும் அவர் தனது பேசும் திறன்களை வளர்த்துக்கொண்டார். இந்தத் திறமையால் கடந்த ஐந்து வருடங்களாக உலகம் முழுவதும் இந்தியா சார்பில் சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச குளோபல் தூதுவராக பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றார்.
இந்த விருந்தில் ஒபாமாவுடன் பேசும் வாய்ப்பு தனக்குக் கிடைத்தால் உலகம் முழுவதிலும் உள்ள சிறப்புக் குழந்தைகளுக்கான தேவைகளை அவரிடம் கூறுவேன் என்று நேஹா தெரிவித்துள்ளார்.
Average Rating