மோட்டார் சைக்கிளை திருடர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு புதுவழி!!
ரஷ்யாவில் மாடிக்குடியிருப்பொன்றின் மூன்றாவது மாடியில் வசிக்கும் நபரொருவர் தனது மோட்டார் சைக்கிளை திருடர்களிடமிருந்து பாதுகாக்க புது வழியொன்றைக் கையாண்டு பிரதேசவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
மேற்கு ரஷ்யாவில் நிஷ்னி நொச்கொரொட் எனும் இடத்தைச் சேர்ந்த பொரிஸ் பரிஹோவ் (56 வயது) என்ற மேற்படி நபர் ஏற்கனவே இரு மோட்டார் சைக்கிள்கள் திருடர்களால் களவாடப்பட்ட நிலையில் மூன்றாவதாக புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளை எப்பாடுபட்டாவது திருடர்களிடமிருந்து பாதுகாக்க முடிவெடுத்தார்.
இந்நிலையில் அவரது மனைவி அந்த மோட்டார் சைக்கிளை வீட்டுக்குள் பூட்டி வைப்பதைத் தவிர அதனை பாதுகாக்க வேறு வழியில்லை என வேடிக்கையாக தெரிவித்தார்.
இந்நிலையில் மனைவி வேடிக்கையாக கூறிய யோசனை பொரிஸ் பரிஹோவை கவர அவர் மின்சார மோட்டார் ஒன்றைக் கொள்வனவு செய்து அதனுடன் உருக்கு கம்பி இணைப்பை பொருத்தி அதன் மூலம் 3 ஆம் மாடியிலுள்ள தனது குடியிருப்பிற்கு மோட்டார் சைக்கிளை தூக்கி இறக்கும் வசதியை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
அவர் தற்போது பொத்தான் ஒன்றை அழுத்துவதன் மூலம் உருக்கு கம்பி இணைப்பில் இணைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளை 3ஆம் மாடி வரை தூக்குவதிலும் ஈடுபட்டு வருகிறார்.
Average Rating